
எடியூரப்பா பதவி விலகியதை அடுத்து, கர்நாடக மாநில முதலமைச்சராக குமாரசாமி திங்கட்கிழமை அன்று பதவி ஏற்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி ஒதுக்கப்பட உள்ளதாகவும், நாளை அமைச்சரவை குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகவும் குமாரசாமி தெரிவித்தார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். அவர் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டார்.
ஆனால் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று மாலை 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.
இந்த நிலையில் உணவு இடைவேளைக்கு பின் இன்று 3.30 மணியளவில் மீண்டும் கூடிய சட்டப்பேரவையில் எடியூரப்பா பேசினார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருந்த நிலையில் தொடர்ந்து உருக்கமுடன் பேசிய அவர், கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி சட்டப் பேரவையில் இருந்து வெளியேறினார்..
எடியூரப்பா பதவி விலகிய நிலையில், ஆளுநருடன் குமாரசாமி சந்தித்து பேசினார். அவரை ஆட்சியமைக்க ஆளுநர் விடுத்த அழைப்பினை அடுத்து வருகிற 21ந்தேதி குமாரசாமி பதவியேற்கிறார்.
இது தொடர்பாக செய்தியாள்களிடம் பேசிய குமாரசாமி , கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாகவும் தெரிவித்த குமாரசாமி, நாளை மறுநாள் அதாவது, மே 21ஆம் தேதி மதியம் முதலமைச்சராக பதவி யேற்க உள்ளதாக கூறினார்.
இந்த விழாவில் சோனியா, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துள்ளேன்” என குமாரசாமி கூறினார்.
ஆந்திரா, தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் தம்மை தெலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக குமாரசாமி கூறினார்.
அமைச்சரவையில் யார், யார் இடம் பெறுவார்கள் என்பது குறித்து நாளை காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக குமாரசாமி கூறினார்.
கர்நாடகத்தில் நிலையான ஆட்சியை தங்களது கூட்டணி தரும் என்ற அவர், இந்த ஆட்சி அமைய காரணமான நீதித்துறைக்கும், நன்றி கூறினார்.
2006 முதல் 2007 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த குமாரசாமி தற்போது இரண்டாவது முறையாக முதலமைச்சர் பதவி ஏற்க இருக்கிறார். மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் 13 பேர், காங்கிரஸ் கட்சி சார்பில் 20 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.