நீட் மாணவர்க்கொல்லி தொடருதே.. என்னால் தாங்க முடியவில்லை.. வேதனையில் புழுங்கும் அன்புமணி ராமதாஸ்.!

By Asianet TamilFirst Published Nov 6, 2021, 7:36 PM IST
Highlights

நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்படுவதையும், அது ஒரு தனி வணிகமாக வளர்வதையும்தான் நீட் தேர்வு ஊக்குவிக்கிறது. தனிப்பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வாய்ப்பும் வசதியும் இல்லாத ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவுகளை சிதைப்பதையும், பறிப்பதையும் மட்டும்தான் நீட் தேர்வு செய்து கொண்டிருக்கிறது.

நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, 50 நாட்களுக்கும் மேலாகியும் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வு முடிவுகள் கடந்த 2-ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் தேர்வு முடிவுக்கு முன்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் சுபாஷ் சந்திரபோஸ் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சேலம் தலைவாசலை அடுத்த வடக்குமரை கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்ற மாணவர் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. தற்கொலை செய்து கொண்ட மாணவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 2019-ஆம் ஆண்டிலேயே 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டார். மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற தீராத வேட்கையால் 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் நீட் தேர்வு எழுதிய அவர், மருத்துவப் படிப்பில் சேரத் தேவையான மதிப்பெண்களை எடுக்க முடியவில்லை. தொடர்ந்து மூன்றாவது முறையாக நடப்பாண்டும் நீட் தேர்வு எழுதிய சுபாஷ் சந்திர போஸ், இம்முறையும் தம்மால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாது என்று அஞ்சியுள்ளார். அந்த அச்சம் காரணமாக தேர்வு முடிவுக்கு முன்பாகவே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மயங்கிய நிலையில் கிடந்த சுபாஷ் சந்திர போஸ் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த 5 நாட்களாக அளிக்கப்பட்டு வந்து, சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்திருக்கிறார். நீட் தேர்வு அச்சத்தால் மேட்டூரைச் சேர்ந்த மாணவர் தனுஷ், அரியலூரைச் சேர்ந்த மாணவி கனிமொழி, காட்பாடியைச் சேர்ந்த சவுந்தர்யா ஆகிய 3 மாணவச் செல்வங்கள் செப்டம்பர் நீட் தேர்வு நடைபெற்ற போது தற்கொலை செய்து கொண்டனர். இப்போது நீட் முடிவுகள் வெளியான நிலையில் இன்னொரு மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. நீட் மாணவர்க் கொல்லி என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.
நீட் தேர்வு அது கொண்டு வரப்பட்ட நோக்கங்களான மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவது, மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதைத் தடுப்பது ஆகியவற்றை சிறிதும் நிறைவேற்றவில்லை. மாறாக, நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்படுவதையும், அது ஒரு தனி வணிகமாக வளர்வதையும்தான் நீட் தேர்வு ஊக்குவிக்கிறது. தனிப்பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வாய்ப்பும் வசதியும் இல்லாத ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவுகளை சிதைப்பதையும், பறிப்பதையும் மட்டும்தான் நீட் தேர்வு செய்து கொண்டிருக்கிறது. இது தேவையற்றது. அதனால் நீட் ரத்து செய்யப்பட வேண்டும்; குறைந்தது தமிழகத்திற்கு விலக்களிக்கப்பட வேண்டும்.
நீட் தேர்வை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அது கண்டிப்பாக அகற்றப்பட்டாக வேண்டும். மாணவர்களின் தற்கொலையை தடுப்பதற்கு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தான் ஒரே தீர்வு. அதற்கான சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, 50 நாட்களுக்கும் மேலாகி விட்டது. எனினும், தமிழக அரசின் சட்டம் இன்னும் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்தி நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதலைப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று அறிக்கையில் அன்புமணி தெரிவித்துள்ளார்.

click me!