
சசி வகையறாவில் ஒரு வாரகாலமாக நடைபெற்று வரும் ரெய்டு குறித்து தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் இதுவரையில் பெரிதாய் வாய் திறக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக கருத்துக்களை தெரிவித்ததோடு சரி.
ஆனால் நேருவின் பிறந்தநாளான இன்று அவரது படத்துக்கு மரியாதை செய்துவிட்டு திருநாவுக்கரசரும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் ரெய்டு குறித்து குய்யோ முறையோ பேட்டியை தட்டியுள்ளனர். (தனித்தனியாகதான் பாஸ்) இதில் முதலில் பேசிய திருநாவுக்கரசர் “அ.தி.மு.க.வின் ஒரு அணியை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் இந்த ரெய்டு சந்தேகத்தை கிளப்புகிறது. அந்த கட்சியின் ஒரு அணியை பலப்படுத்தவும், இன்னொரு அணியை வெகுவாக பலவீனப்படுத்தவுமே இந்த ரெய்டுகள் நடப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன.
இப்போ நடக்குற ரெய்டு இருக்கட்டும் இதுக்கு முன்னாடி நடந்த சேகர் ரெட்டி, அன்புநாதன், மாஜி அ.தி.மு.க. அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மாஜி தலைமை செயலாளர் இவர்கள் வீட்டிலும், அலுவலகத்திலும் ரெய்டு பண்ணி கோடிக்கோடியா தங்கமும், பணமும் அள்ளுனதா சொன்னாங்களே! அதுல எல்லாம் வழக்குகள் பதியப்பட்டுச்சா? என்ன நடவடிக்கை எடுத்தீங்க. அதுக்கு பதிலை சொல்லுங்க.” என்றார்.
அரசர் இன்னமும் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் ஆதரவாளராகத்தான் செயல்படுகிறார் என்று ஸ்டாலினும், காங்கிரஸின் சில கோஷ்டி தலைவர்களும் கடுப்பாகும் நிலையில், அவரது இன்றைய பேச்சும் அப்படித்தான் இருக்கிறது.
அடுத்து வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனோ “சசி குடும்பத்தை வளைத்து வளைத்து இந்த ரெய்டு நடந்திருக்குது சரி. ஆளும் டீமை எப்போ ரெய்டு பண்ணுவீங்க? அமைச்சரவையின் அத்தனை பேரின் சொத்துக்களையும் தணிக்கை செய்ய வேண்டும், ரெய்டு செய்ய வேண்டும்.
உள்ளபடியே சொல்லப்போனால் இது காலம் கடந்த ரெய்டு. ஜெயலலிதா இருக்கும் போதே இந்த ரெய்டை நடத்தியிருக்க வேண்டும். இருந்தாலும் ஓ.கே! சசி குடும்ப சொத்துக்களை சுற்றிச்சுற்றி ரெய்டு செய்தால் மட்டும் போதுமா, சசிகலாவை சிறையிலிருந்து அழைத்து வந்து விசாரியுங்கள். இத்தனை கோடிக்கோடியான சொத்து எங்கிருந்து வந்தது என்று கேளுங்கள்.
அதேவேளையில் இந்த தினகரனை விட்டு வைக்கவே கூடாது. உடனடியாக சிறையிலடைக்க வேண்டும். முறைகேடாக சொத்து சேர்த்த விவகாரத்தில் அவரது சொத்துக்களில் ரெய்டு நடக்கையில் ‘இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். எல்லா சிறையையும் பார்த்தவன். என்னை தூக்கி 25 வருஷம் உள்ளே போட்டாலும் அதன் பிறகும் வெளியே வந்து அரசியல் செய்வேன்.’ என்று தெனாவெட்டாக பேசுகிறார். இவரை ஏன் வெளியில் விட்டு வைக்க வேண்டும்?” என்று பொளந்து கட்டியிருக்கிறார்.
தல ஒரேயொரு டவுட்டு ‘தெனாவெட்டா பேசுபவரை உள்ளே தூக்கி போடணும்னா உங்களையெல்லாம் எப்பவோ தூக்கி வெச்சிருக்கணுமே!’ என்று காங்கிரஸிலுள்ள இளங்கோவனுக்கு எதிர்கோஷ்டி கதர்கள் டைமிங் கமெண்ட் அடிக்கிறார்கள்.