சைவத்தையும், தமிழையும்தான் பிரிக்க முடியாது. இந்துவிற்கும், தமிழுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதபோது என்னை மலையாளி எனக் கூறி எதாவது பேச வேண்டும் என்பதற்காக ஹெச்.ராஜா பேசுகிறார்.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விழுப்புரத்தை அடுத்த கோலியனூரிலுள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடான ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், ’’தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அனைத்து பதவிகளுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. சில இடங்களில் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வெற்றிபெற வேண்டும் என நான் ஒவ்வொரு முறையும் போராடி வருகிறேன். நாங்கள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதே வெற்றிதான்.
மக்களவை தேர்தலில் 17 லட்சம் ஓட்டுகளும், சட்டசபை தேர்தலில் 30 லட்சம் ஓட்டுகளும், தமிழகத்தின் ஒரு பகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது, 12 சதவீதம் ஓட்டுகள் பெற்றுள்ளதால் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுவோம். தமிழகத்தில் ஆள்தான் மாறியுள்ளனர், ஆட்சி மாறவில்லை. எடப்பாடி சென்று ஸ்டாலின் வந்துள்ளார். 202 வக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் பத்தை கூட நிறைவேற்றவில்லை எனவும், மாநில அரசுகளின் தீர்மானங்களை மத்திய அரசு மதிப்பதில்லை.
ஏழுபேர் விடுதலைக்கு சட்டம் நிறைவேற்றினால் அதை மத்திய அரசு ஏற்பதில்லை. இதை எதிர்த்து தமிழக ஆட்சியாளர்கள் சண்டை போடுவதில்லை.
சைவத்தையும், தமிழையும்தான் பிரிக்க முடியாது. இந்துவிற்கும், தமிழுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதபோது என்னை மலையாளி எனக் கூறி எதாவது பேச வேண்டும் என்பதற்காக ஹெச்.ராஜா பேசுகிறார். என்னுடன் ஹெச்.ராஜா நேருக்கு நேராக விவாதிக்க தயாரா ? என அவர் சவால் விடுத்துள்ளார்,