ஆண் உறுப்பில் வீக்கம்.. ரத்த வாந்தி.. கல்லூரி மாணவர் கொலையா? DGP நேரடியாக தலையிடுங்க.. நியாயம் கேட்கும் TTV.!

By vinoth kumarFirst Published Dec 7, 2021, 8:10 AM IST
Highlights

திடீரென்று நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மணிகண்டனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மூன்று முறை ரத்த வாந்தி  எடுத்ததாக சொல்லபடுகிறது. மேலும் அவரது ஆண் உறுப்பில் வீக்கம் ஏற்பட்டு இருந்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பான விசாரணையில், டிஜிபி நேரடியாக தலையிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணக்குமார். இவரது மகன் மணிகண்டன்(21). கல்லூரி மாணவரான இவர், டிசம்பர் 4ம் தேதி மாலை பரமக்குடி - கீழத்தூவல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வாகனச் சோதனையில் ஈடுபட்ட கீழத்தூவல் போலீசார் மணிகண்டனின் வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால், வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக, மணிகண்டனை போலீசார் விரட்டிச் பிடித்து, விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். 

பின்னர் அன்று இரவு மணிகண்டனின் தாயாரை வரவழைத்துஅவரை கண்டித்து வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால், திடீரென்று நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மணிகண்டனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மூன்று முறை ரத்த வாந்தி  எடுத்ததாக சொல்லபடுகிறது. மேலும் அவரது ஆண் உறுப்பில் வீக்கம் ஏற்பட்டு இருந்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மணிகண்டனின் உறவினர்கள், கிராமத்தினர் போலீசார் கொடூரமாக தாக்கியதில்தான் மணிகண்டன் உயிரிழந்தார் எனக் கூறி, முதுகுளத்தூர் - பரமக்குடி சாலையில் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் முதுகுளத்தூர் டிஎஸ்பி ஜான்பிரிட்டோ, குற்றப் பிரிவு டிஎஸ்பி திருமலை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேதப் பரிசோதனை முடிவு வந்த பிறகு இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்நிலையில்,  கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், மேலத்தூவல் கிராமத்தில் காவல்துறையினரின் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன். 

இந்நிகழ்வில் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதால் இதுகுறித்து டி.ஜி.பி. நேரடியாக தலையிட்டு, விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்திடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

click me!