முல்லை பெரியாறு விவகாரத்தில் இரு மாநில மக்களின் நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்பதை தமிழக அரசு உறுதி செய்யும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: முல்லை பெரியாறு விவகாரத்தில் இரு மாநில மக்களின் நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்பதை தமிழக அரசு உறுதி செய்யும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:
நீங்கள் கடந்த 24ம் தேதி எழுதிய கடிதத்தில் இரு மாநில மக்களின் வரலாற்று பூர்வ உறவுகள் மென்மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். அதை நானும் ஆமோதிக்கிறேன்.
10 நாட்களாக கேரளாவில் பெய்து வரும் கனமழை, வெள்ளம், சேதங்கள் குறித்து கவலை கொண்டு உள்ளோம். இக்கட்டான காலகட்டத்தில் உங்களுக்கு நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம்.
கேரள மாநில மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, தேவைப்படும் எந்த உதவிகளையும் தருவதற்கு தமிழக அரசு தயாராகவே இருக்கிறது. இது குறித்து எல்லையோர மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
வெள்ள நிவாரணம், பொருள் வினியோகம் ஆகியவற்றை அனுப்ப வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டு இருக்கிறேன். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
தமிழக அதிகாரிகள் தொடர்ந்து கேரள மாநில அதிகாரிகளுடன் பேசி வருகின்றனர். 27ம் தேதி காலை 9 மணி நிலவரப்படி நீர்மட்டம் 137.60 அடியாக இருக்கிறது. நீங்கள் கேட்டு கொண்ட படி வைகை ஆற்றின் சுரங்க பாதை மூலம் அதிகளவு நீரை எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.
நீர்மட்டத்தை உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். கூடுதலாக நீரை வெளியேற்றும் முன்பு அதன் விவரங்களை தெரிவிக்க வேண்டுகிறேன். இரு மாநில மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறோம் என்று அந்த கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இரண்டு மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு கேரள முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/ibSBqrPBgG
— CMOTamilNadu (@CMOTamilnadu)