
தங்களுக்கு 113 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக முதல்வர் பழனிச்சாமி அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான இறுதி விசாரணை தேர்தல் ஆணையத்தில் வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுகிறது. இறுதியாக கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க இன்றுவரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர் பழனிச்சாமி அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் இன்று சமர்ப்பிக்கப்பட்டன. அதில் 113 எம்.எல்.ஏக்களின் ஆதரவும் 43 எம்.பிக்களின் ஆதரவும் இருப்பதாக பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதன்மூலம் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குத் தேவையான எம்.எல்.ஏக்கள் தங்களிடம் இல்லை என்பதை முதல்வர் அணி தானாகவே தெரிவித்துவிட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏக்கள் முதல்வர் அணியில் இல்லை. 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என நினைத்துக்கொண்டு 113 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
தங்கள் வாயாலேயே அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்.எல்.ஏக்கள் இல்லை என்பது முதல்வர் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.