
5 மாநிலச் சட்டசபைத் தேர்தல் பாரதியஜனதா கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக அமையும். இந்த தேர்தலில் அந்த கட்சிக்கு பெரிய அளவிலான தோல்வி ஏற்படும் நிலையில் அது 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தோல்விக்கான முதல்படியாக அமையலாம். அதேசமயம், மெகா வெற்றி பெற்றால், 2019ம் ஆண்டில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பாக அமையலாம்.
5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் உத்தரப்பிரதேசம், கோவா மாநிலங்களில் தொங்கு சட்டசபை உருவாகும் என்றும், பஞ்சாப்பில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உத்தரகாண்டில் பாரதிய ஜனதா ஆட்சியை கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.
மாநிலங்கள் அவை பலம்
மாநிலங்கள் அவையில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் பலம் அதிகமாக இருப்பதால், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி கொண்டு வரும் மசோதாக்களுக்கு பெரிய தடங்கலை ஏற்படுத்தி வருகிறது.
இந்த தேர்தலில்பா.ஜனதா பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கும் நிலை ஏற்பட்டால், மாநிலங்கள் அவையில் உறுப்பினர்கள் பலம் அதிகரிக்கும்.
இப்போது 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்கள் அவையில் காங்கிரஸ் கட்சிக்கு 59 எம்.பி.க்களும், பாரதிய ஜனதாவுக்கு 56 எம்.பி.க்களும் உள்ளனர். இந்த தேர்தலில் கிடைக்கும் வெற்றியைப் பொருத்து மாநிலங்கள் அவையில் இரு கட்சிகளின் பலம் வரும் காலத்தில் அதிகரிக்கும்.
யார் எவ்வளவு?
அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்க அவைக்கு 31 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இப்போது அந்த மாநிலத்தில் இருந்தபா.ஜனதா கட்சிக்கு 3 பேர் மட்டுமே இருக்கிறார்கள்.
அதேபோல, பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இருந்து 12 உறுப்பினர்கள் மாநிலங்கள் அவைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
தோல்வியால் யாருக்கு பாதிப்பு?
இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஒருவேளை மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டால், பிரதமர் மோடிக்கும், அவரின் ஆட்சி, திட்டங்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய பின்னடைவாக அமையும். உத்தரப்பிரதேச மக்களின் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக 24 இடங்களில் தீவிரப் பிரசாரங்களை மோடி செய்து இருக்கிறார்.
அதேசமயம், முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும், பாரதிய ஜனதாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
2019ம் ஆண்டுக்கு முன்னோட்டம்
பீகார் மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த தோல்வியால் அந்த கட்சியின் செயல்பாடின் தீவிரம் சற்று குறைந்து இருந்தது, உத்தரப்பிரதேசத்திலும் பாரதிய ஜனதா தோற்கும் பட்சத்தில் 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கான பாரதிய ஜனதா கட்சிக்கு முதல் படியாக இது அமையலாம்.