தமிழகத்தில் பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும் மூர்க்கத்தனமாக வைத்திருக்க வேண்டியதுதான் என் வேலை என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும் மூர்க்கத்தனமாக வைத்திருக்க வேண்டியதுதான் என் வேலை என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜகவின் அரசியல் அதிரடி ஆகத்தான் இருக்கும் என்றும், Soft ஆக அரசியல் செய்ய முடியாது என்றும் மேலும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக அக்கட்சியை அட்சியை மிகக்கடுமையாக விமர்சித்து வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி அமைச்சர்கள் வரை ஒவ்வொருவர் மீதும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் மத்தியில் பாஜகதான் எதிர்க்கட்சி என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சியில் அக்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக அதிமுகவை காட்டிலும் திமுகவை பாஜகவினர் மூர்க்கமாக எதிர்த்து வருகின்றனர்.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பாஜக அதை ஊதி பெரிதாக்கி அரசியல் செய்வதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது,இந்த வரிசையில் மதுரை விமான நிலையத்தில் மறைந்த ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதில் வழக்கம் போல திமுக- பாஜக இடையே மோதல் ஏற்பட்டது, ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வருகை தந்திருந்தார், அப்போது அங்கு பாஜகவினர் ஏராளமானோர் திரண்டிருந்ததால், அரசு நிகழ்ச்சியில் அரசியல் கட்சிகளுக்கு என்ன வேலை என அவர் கேள்வி எழுப்பியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
அத்துடன் அது நிற்காமல் அமைச்சர் வெளியில் வந்தபோது அவர் வாகனம் மீது பாஜகவினர் செருப்பு வீசி தாக்கியதால் விஷயம் விவகாரமானது. வட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கலவரத்தை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சி செய்து வருகின்றனர் என திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பாஜக மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையில் அண்ணாமலையும்- மதுரை புறநகர் பாஜக மாவட்ட செயலாளர் மகா சுசீந்திரம் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இருவரும் அமைச்சரின் கார் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர் என அந்த ஆடியோவை காட்டி திமுகவினர் பாஜகவுக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர். ஆனால் தன்னைப் போலவே யாரோ ஒருவர் மிமிக்ரி செய்துள்ள ஆடியோதான் அது என அண்ணாமலை மறுத்துள்ளதுடன், அந்த ஆடியோ குறித்து பாஜகவினர் சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பாஜக தொண்டர்கள் நிர்வாகிகள் ஆக்ரோஷமாகத்தான் இருப்பார்கள் என அவர் கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது :-
தமிழகத்திற்கு வரக்கூடிய மிகப்பெரிய திட்டங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை, அதற்கு காரணம் திமுகதான், பாஜக தொண்டர்கள் நிர்வாகிகள் எப்போதும் மூர்க்கத்தனமாக தான் இருப்பார்கள், அவர்களை ஆக்ரோஷமாக வைத்திருக்க வேண்டியதுந்தான் எனது வேலை, எப்போதும் தமிழகத்தில் பாஜகவின் அதிரடியாகத்தான் இருக்கும், Soft ஆக அரசியல் செய்ய முடியாது என்ற அவர், மதுரை சம்பவம் குறித்து வெளியான ஆடியோ பாதிதான் வந்துள்ளது, திமுகவினர் முழு ஆடியோவையும் வெளியிட வேண்டும்,
பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய வார்த்தைகள் அதில் இருக்கும், எனக்கு தமிழ் தெரியவில்லை அதனால் சில வார்த்தைகள் தவறாக வந்து விட்டது, அதனை பெரிது படுத்த வேண்டாம் என்று அவர் கூறுகிறார், தமிழக அமைச்சருக்கு தமிழ் தெரியவில்லை எனக் கூறுவது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.