விரைவில் தமிழகம், தெலங்கானாவில் பாஜக ஆட்சி.. அடுத்த டார்கெட் தென்னிந்தியாதான்.. கர்ஜனை செய்த அமித் ஷா.!

By Asianet TamilFirst Published Jul 3, 2022, 10:30 PM IST
Highlights

பாஜகவின் அடுத்தகட்ட வளர்ச்சி இனி தென்னிந்தியாவில் இருக்கும் என்று தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சிக்கு வரும் என்றும் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இரண்டாம் நாளாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் முன்னாள் தேசிய தலைவருமான அமித்ஷா அரசியல் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். இக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், “இந்தியாவில் வாரிசு அரசியல், சாதி வெறி அரசியல், திருப்திப்படுத்தும் அரசியல் போன்றவற்றால் பல ஆண்டுகளாக நாடு அனுபவித்த துன்பங்கள் மிக அதிகம். இந்தியாவை நீண்ட காலமாக ஆட்சி செய்த கட்சிகள் எல்லாம் இப்போது வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மீது வைக்கப்பட்ட எல்லா குற்றச்சாட்டுகளும் உச்ச நீதிமன்றத்தால் தவறானவை என்று அறிவிக்கப்பட்டு விட்டன.

இதையும் படிங்க: பாஜகவில் முதல்வரின் மகன் முதல்வர் ஆக முடியாது.. சந்திரசேகர் ராவை அட்டாக் செய்த பாஜக அமைச்சர்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஆகும். குஜராத் கலவரம் தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளும் போது பிரதமர் மோடி அமைதியாகத்தான் இருந்தார். அதே வேளையில் அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பிய பிறகு என்ன செய்தது?  காங்கிரஸ் கட்சி வன்முறையைத்தான் பரப்பியது. எதிர்க்கட்சிகள் எல்லாம் இன்று பிளவுபட்டுள்ளன. கட்சியில் ஜனநாயகத்தை நிலைநாட்டவே காங்கிரஸ் உறுப்பினர்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் கட்சித் தலைவரையே தேர்ந்தெடுக்க முடியவில்லை.

இதையும் படிங்க: ராகுல்காந்தி அதிமுககிட்ட ஆதரவு கேட்டரா? கிடையவே கிடையாது... அடித்து சொல்லும் காங்கிரஸ்!!

காங்கிரஸ் கட்சிக்கு மோடி குறித்த பயம் உள்ளது. அதனால்தான் தேசிய நலன் கருதி எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும் காங்கிரஸார் எதிர்க்கிறார்கள். அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் இந்தியாவில் பாஜகவின் சகாப்தமாகதான் இருக்கும். அப்போது இந்தியா உலகுக்கே தலைமை தாங்கும். தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும். பாஜகவின் அடுத்தகட்ட வளர்ச்சி இனி தென்னிந்தியாவில் இருக்கும்.” என்று அமித்ஷா பேசினார். அமித் ஷா பேசிய தகவலை அஸ்ஸாம் முதல்வர் ஹிமானந்த பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் கூறினார். 

இதையும் படிங்க: உலகின் மூத்த மொழி தமிழ்..பிரதமரின் தமிழன்புக்கு நன்றி! - அண்ணாமலை ட்வீட் !

click me!