இலவசம் விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம்.. டார் டாரா கிழித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.

By Ezhilarasan BabuFirst Published Aug 19, 2022, 5:54 PM IST
Highlights

பாஜக இலவசம் வேண்டாம் என இரட்டை வேடம் போடுகிறது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தார் என்றும் அவர் கூறியுள்ளார். 

பாஜக இலவசம் வேண்டாம் என இரட்டை வேடம் போடுகிறது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தார் என்றும் அவர் கூறியுள்ளார். இலவசம் என்று அல்ல எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் தமிழக முதலமைச்சரின் நோக்கம் என்றும் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி இலவசங்கள் கூடாது என பேசி வருகிறார், இலவசங்களால் எந்த வளர்ச்சியும் ஏற்படாது என்றும் பேசி வருகிறார். இதனடிப்படையில் நாடு முழுவதும் இலவசம் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசம் சென்றிருந்த பிரதமர் மோடி ஓட்டுக்காக இலவசங்களை வழங்கும் அரசியல் கட்சிகளின் கலாச்சாரம் ஆபத்து நிறைந்தது என கூறியிருந்தார், அது இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மிக ஆபத்தானது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: மகாத்மா காந்தியின் படத்தை சேதப்படுத்திய காங்கிரஸ் கட்சியினர்.. தட்டி தூக்கிய போலீஸ் - வைரல் வீடியோ!

இந்நிலையில் சென்னை கபாலீஸ்வரர் கல்லூரியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர், இந்த ஆண்டு புதிய கல்லூரிகளில் சேர்ந்துள்ளார் மாணவ மாணவியருக்கு மட்டுமின்றி இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் இல்லை, இதனை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது அனைவரும் படித்து முன்னேற வேண்டும் என்ற முற்போக்கு எண்ணத்தோடு இது செய்யப்படுகிறது. இலவசங்கள் வேறு, சமூக நலத்திட்டங்கள் வேறு என கூறினார். சிலர் இலவசங்கள் குறித்த நாட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்கள், கல்வி மருத்துவத்திற்காக செலவு செய்வது இலவசம் கிடையாது அத்தியாவசியம் என அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: வீர வசனம் பேசிய ஸ்டாலின்..! மோடியுடன் சந்திப்பில் சேர் நுனியில் உட்கார்ந்தது ஏன்..? அண்ணாமலை கிண்டல்

இந்நிலையில் இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும் என்றார், விவசாயிகளுக்கும் இலவச மின்சாரத் திட்டம் தொடரும் என்றார், இலவச திட்டங்கள் கூடாது என்பதில் மத்திய அரசு தெளிவாக இருக்கிறது, ஆனால் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்ந்து வழங்குவதில் தமிழக முதலமைச்சர் உறுதியாக இருந்து வருகிறார் என அமைச்சர் கூறினார். இலவசம் கூடாது எனக் பேசிவரும் கட்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவசத் திட்டங்கள் கூடாது என்கிறார்களா என அவர் கேள்வி எழுப்பினார்.

இலவசம் வேண்டாம் என பாஜக இரட்டை வேஷம் போடக்கூடாது என்றார், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு அவர்கள் விலை நிர்ணயம் செய்ய முடியாத நிலை இருந்தது, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இந்த  திட்டத் அத்தியாவசியமான ஒன்று, மடிக்கணினி, சைக்கிள் போன்றவற்றை வழங்குவது மிக முக்கியமான திட்டங்கள் ஆகும், விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது,

இத்திட்டங்கள் என்பது அடித்தட்டு மக்களை ஏழை மக்களை கவர்வதற்கு, வாழ்வில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்கள்தான் இந்த திட்டங்கள். இலவசம் வேண்டாம் என்று பேசும் கட்சிகள்தான் இலவசங்கள் இருக்கிற மாநிலங்களுக்கு செல்லும் போது அங்கு தேர்தல் களத்தில் இலவசங்கள் அறிவிக்கிறார்கள். பிறகு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இலவசம் கூடாது என்று சொல்கிறார்கள், ஆக இலவசம் விவகாரத்தில் அவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள் என அமைச்சர்  செந்தில் பாலாஜி விமர்சித்தார்.

 

 

click me!