
வீட்டு பணிப்பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா புஷ்பா உள்ளிட்ட 3 பேரை வரும் 17-ந் தேதி வரை கைது செய்ய தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா வீட்டில் பணிப் பெண்களாக வேலை செய்த சகோதரிகளான ஜான்சிராணி, பானுமதி ஆகியோர் அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் பாலியல் புகார் கொடுத்து காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் பானுமதி மற்றொரு புகார் கூறப்பட்டுள்ளது. அதில், சசிகலா புஷ்பா தரப்பினர் என்னை கடத்தி வைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து என்னை மீட்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அதன் பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரதிலகன், சசிகலா புஷ்பாவின் தாயார் கவுரி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க மதுரை உயர்நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா தரப்பினர் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நீதிபதி நிஷாபானு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா புஷ்பா, லிங்கேஸ்வரதிலகன், கவுரி ஆகிய 3 பேரையும் வருகிற 17-ந் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.