234 தொகுதிகளிலும் அமமுக போட்டி..! தடலாடியாக அறிவித்த தினகரன்..! பின்னணியில் நடந்தது என்ன?

By Selva KathirFirst Published Feb 17, 2021, 11:13 AM IST
Highlights

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அதிமுக தங்கள் வசம் வருவது இயலாத ஒன்று என்பதை முன்பே கணித்த தினகரன் அதனை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கியது தான் அமமுக.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அதிமுக தங்கள் வசம் வருவது இயலாத ஒன்று என்பதை முன்பே கணித்த தினகரன் அதனை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கியது தான் அமமுக.

மதுசூதனன் அவைத்தலைவராக இருக்கும் அதிமுக தான் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் மூன்று வருடங்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. இதற்கு எதிரான சசிகலாவின் மனுவையும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டது. இதன் பிறகு தான் அமமுக எனும் கட்சியை தினகரன் உருவாக்கினார். நாடாளுமன்ற தேர்தலில் தனி அணியாக களம் இறங்கிய அமமுக படு தோல்வியை சந்தித்தது. ஆனால் தொடர்ந்து கட்சியை தினகரன் நடத்தி வருகிறார். கொரோனா சூழலில் ஆறு மாதங்கள் வரை வீட்டிற்குள் முடங்கி கிடந்த தினகரன் தற்போது தான் வெளியே வர ஆரம்பித்துள்ளார்.

இந்த கால கட்டத்தில் அமமுக நிர்வாகிகள் பலர் மறுபடியும் அதிமுக சென்றுவிட்டனர். வேறு சிலர் திமுக பக்கம் சென்றுவிட்டனர். இதனால் புதிய நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட அமமுகவை சீரமைக்கும் பணிகளில் தினகரன் தீவிரம் காட்டி வந்தார். அதே சமயத்தில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் அவருக்கான வரவேற்பு கொடுப்பதற்கு தனது அமமுகவை பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அமமுகவில் எந்த பொறுப்பையும் ஏற்க சசிகலா தயாராக இல்லை. அப்படி அவர் ஏற்றுக் கொண்டால் அதிமுகவை சட்டரீதியாக மீட்கும் வழக்ககளில் பின்னடைவு ஏற்படும்.

அதே சமயம் மறுபடியும் அதிமுக பொதுச் செயலாளர் ஆவதில் சசிகலா மிக உறுதியாக உள்ளார். அதற்கான பணிகளில் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் தினகரன் அமமுகவை வலுப்படுத்தவே விரும்புகிறார். அதிமுகவை சசிகலா மீட்டாலும் கூட அமமுகவை தொடர்ந்து நடத்தும் முடிவில் தினகரன் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. அது தான் அவரது பேச்சிலும் எதிரொலிக்கிறது. இந்த தேர்தலில் அதிமுகவில் தனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று சசிகலா கருதுகிறார். ஆனால் தினகரனோ இந்த தேர்தலில் அமமுக தனி அணியாக களம் இறங்குவதற்கான வியூகத்தை வகுத்து வருகிறார்.

அதன்படி திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அமமுக போட்டியிடும் என்று கூறியுள்ளார். அத்தோடு வெற்றி பெற்ற அம்மாவின் ஆட்சியை அமமுக தமிழகத்தில் அமைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார. அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், அப்படி என்றால் அதிமுகவை மீட்கப்போவதாக சசிகலா கூறி வருவது எப்படி நடைபெறும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அதிமுகவை ஜனநாயக முறைப்படி மீட்க தொடங்கப்பட்டது தான் அமமுக என்று சமாளித்தார் தினகரன். ஆனால் 234 தொகுதிகளிலும் போட்டி என்று அறிவித்திருப்பதன் மூலம் இந்த தேர்தலில் அதிமுகவில் சசிகலாவால் எந்த அதிகாரத்திற்கும் வர முடியாது என்று தெளிவாகியுள்ளது.

அதாவது தினகரன் நிதர்சனத்தை உணர்ந்து அதாவது அதிமுகவை கைப்பற்றுவது இயலாத காரியம் என்பதை உணர்ந்து 234 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ளார். 

click me!