
எனக்கு மரணம் குறித்து பயமில்லை, எனக்கு 'Z' பிரிவு பாதுகாப்பு வேண்டாம் என மக்களவையில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிப்ரவரி 3ம் தேதி மீரட் நகரில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சாஜர்ஷி டோல்கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது ஓவைசியின் காரின் முன் பகுதியில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், ஓவைசி அதிஷ்டவசமாக உயிர் தப்பியதையடுத்து அவரது கார் டயர் பஞ்சரானது. அந்தக் காரை அங்கேயே விட்டுவிட்டு, மற்றொரு காரில் டெல்லி வந்தடைந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் எப்படி அவர்களால் சுட முடிந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மத்தியில் ஆளும் பாஜகவும் மாநிலத்தில் ஆளும் பாஜகவும் தான் இதற்கு பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களாக சந்தேகத்திற்குரிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஓவைசிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கலாம் என உள்துறை அமைச்சகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று மக்களவையில் பேசிய ஓவைசி;- இப்போது இந்தியா இரண்டு பிரிவுகளாக உள்ளது. ஒன்று அன்பாலான இந்தியா. இன்னொன்று வெறுப்பால் ஆன இந்தியா. இளைஞர்களை வெறுப்பு மயமாக்குவது யார்? என் மேல் தாக்குதல் நடத்தியவர்களை யூஏபிஏ சட்டத்தின் கீழ் ஏன் தண்டிக்க கூடாது? என்னை இந்தியாவின் ஏ கிளாஸ் குடிமகனாக நடத்துங்கள் போதும். எனக்கு மரணம் குறித்து பயமில்லை. எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு எல்லாம் வேண்டாம் என்று கூறினார்.