
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமாக மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் எஸ்.ஆர்.கே.பாலு தலைமையில் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்து விஜயகாந்துக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
15 வருடங்களுக்கு முன்பு கேப்டன் விஜயகாந்தின் தேமுதிகவை கண்டு பிரதான அரசியல் கட்சிகளெல்லாம் மிரண்டன. அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சி எளிதில் பிடித்துவிடலாம் என கணக்குப் போட்டன. ஆனால், தற்போது தேமுதிக நிலைமை ரொம்ப பரிதாபமாக உள்ளது. இந்நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் அடுத்தடுத்து தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. இதனால், முக்கிய நிர்வாகிகள் இனியும் தேமுதிகவில் இருந்தால் எதிர்காலம் இருக்காது என்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், தேமுதிக கட்சியைச் சேர்ந்த திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.பாலு தலைமையில், தே.மு.தி.க.வைச் சேர்ந்த மாவட்டப் பொருளாளர் ஜே.எல்.சங்கர், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜே.வேலுச்சாமி ஏ.பிரபாகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.கருப்புச்சாமி, தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் ஏ.கோவிந்தராஜ், ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் பி.முருகேசன், மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் எம்.அருண்குமார், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் துணைச் செயலாளர் டி.பாலாஜி, ஒன்றியச் செயலாளர் பி. பழனிவேல், மாவட்ட கேப்டன் மன்றச் செயலாளர்கள் எஸ்.கோபிநாத், சத்யா முனியப்பன் உள்ளிட்டோர் தேமுதிகவில் இருந்து விலகி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமாக மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் துரைமுருகன், செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை உள்ளிட்டோர் உடனிருந்தனர். மாவட்டச் செயலாளர் ஒருவர் கட்சியை விட்டு விலகியிருப்பது தேமுதிக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.