
கொரோனா 2வது அலையாக நம்மை நெருங்கும் ஆபத்து உள்ள சூழலில், மிகுந்த விழிப்புணர்வோடும், பாதுகாப்போடும் தேர்தல் களத்தை அணுக வேண்டும் என அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த சில தினங்களாக அதிவேகத்தில் பரவும் கொரோனா இரண்டாவது அலையாக உருவெடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த அபாயகரமான சூழலில் கழகத் தோழர்களான நாமும் விழிப்புணர்வோடும், போதிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம்.
மக்களிடம் பிரச்சாரம் செய்யச் செல்லும்போதும், நான் உள்ளிட்ட கழக முன்னணியினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் செய்ய வரும் போதும் போதிய சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மிக முக்கியமாக நான் பிரச்சார களத்திற்கு வரும் போது எனக்கு சால்வை அணிவிப்பது, பூங்கொத்து கொடுப்பது, பரிசுப்பொருள்கள் கொடுப்பது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
ஜனநாயகத்தை வலுப்படுத்த பொதுமக்கள் தேர்தல் நடைமுறைகளில் பங்கெடுப்பது அவசியம் என்றாலும், கொரோனா பேரிடர் நம்மைவிட்டு முழுமையாக நீங்காத நிலையில் இன்னும் சொல்லப்போனால் இரண்டாவது அலையாக நம்மை நெருங்கும் ஆபத்து உள்ள சூழலில், மிகுந்த விழிப்புணர்வோடும், பாதுகாப்போடும் தேர்தல் களத்தை அணுக வேண்டும். தனிமனித பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டு தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்க வேண்டும் என்று மிக்க பணிவன்போடு தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.