ஆதிதிராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வீணடித்துள்ளார்.… திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!!

By Narendran SFirst Published Dec 26, 2022, 4:34 PM IST
Highlights

ஆதி திராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, உடனடியாக மீண்டும் அத்துறைக்கு வழங்கி, மாணவர்களின் அடிப்படைத் தேவைகளையும், இதர நலப் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

ஆதி திராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, உடனடியாக மீண்டும் அத்துறைக்கு வழங்கி, மாணவர்களின் அடிப்படைத் தேவைகளையும், இதர நலப் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் உள்ள, சமூகத்தில் பின் தங்கிய வகுப்புகளில் இருக்கும் மாணவர்களில் நூற்றுக்கணக்கானோர், ஒவ்வொரு வருடமும், எப்படியாவது சமுதாயத்தில் முன்னேறிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன், பட்டப்படிப்பிற்காகவும், பட்ட மேற்படிப்பிற்காகவும், தலைநகர் சென்னைக்கு வருகிறார்கள். தமிழக அரசின் ஆதி திராவிட நலத் துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில், அந்த மாணவர்கள், அடிப்படை வசதிகளுக்கே போராட வேண்டிய அவல நிலையில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. மாணவர்கள் விடுதிக் கூரை, மழைக்காலங்களில் ஒழுகுவதாகவும், சரியான குடிநீர் கிடைக்காமலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் நெளிவதாகவும் விடுதி மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: 'தம்பி மல! பில்லு இன்னும் வரல'.. அண்ணாமலையை வம்புக்கு இழுத்த திமுகவினர் - வைரல் போஸ்டர்!

கடந்த மழைக்காலத்தில், மழை நீர், விடுதியின் உள்ளே புகுந்ததால், மாணவர்கள் தூங்குவதற்கு இடமில்லாமலும், நோய்த் தொற்றுகளுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மனதை உலுக்குகிறது. மேலும், ஆதி திராவிடர் நலத்துறையால், விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டில், போர்வை, தலையணை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்திருக்கிறார்கள் மாணவர்கள். இது மட்டும் அல்லாது, மாணவர்களுக்கு, மாதாமாதம் இதர செலவாக வழங்கப்பட வேண்டிய 150 ரூபாயும் வழங்கப்படவில்லை என்றும், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இது வரை நடவடிக்கை எதுவும் இல்லை என்றும் மாணவர்கள் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். மாணவர் விடுதிகள் இத்தனை அலங்கோலமான நிலையில் இருக்க, அரசால் ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பாக 33 நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. ஆனால் அவற்றில் 20 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது. சென்ற ஆண்டு ஆதிதிராவிடர் நலனுக்காக 4,099 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் 20 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடக்கி, ஒதுக்கப்பட்ட நிதியை வீணடித்துள்ளார். சென்ற ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் 757 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எனக்கு 32 பல்லு இருக்கு.. அமைச்சர் எ.வ. வேலுக்கு பல்லு இருக்கான்னு தெரியல.. பங்கமாய் கலாய்க்கும் ஜெயக்குமார்.!

ஆனால் ஆதிதிராவிடர் விடுதிக்கு செலவிடாதது ஏன் என்ற கேள்விக்கு திறனற்ற திமுக பதில் அளிக்கவேண்டும்.  கல்வி, வீட்டு வசதித் திட்டங்கள், வேலைவாய்ப்பு, நூலகங்கள், மாணவர் விடுதிகள் போன்ற அடிப்படைத் தேவைகள் பல நிறைவேற்றப்படாமல் இருக்க, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் முழுவதுமாகப் பயன்படுத்தாமல் இருப்பது, திறனற்ற திமுக அரசின் மெத்தனத்தையும், சமுதாயத்தில் பின் தங்கியிருக்கும் மாணவர்கள் மீதான கடும் அலட்சிய போக்கையும் காட்டுகிறது. ஆனால் அரசியல் மேடைகளில் சமூக நீதி நாடகம் அரங்கேற்றுவது திமுகவின் போலி வேஷத்தையே வெளிப்படுத்துகிறது. எனவே, தமிழக அரசு, ஆதி திராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, உடனடியாக மீண்டும் அத்துறைக்கு வழங்கி, மாணவர்களின் அடிப்படைத் தேவைகளையும், பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, நூலகம் உள்ளிட்ட இதர நலப் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இந்த அறிக்கையின் வாயிலாக வற்புறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார். 

click me!