மத்திய அரசு திட்டங்களில் ஊழல் செய்து பணம் சம்பாதிப்பது மட்டுமே திமுகவின் குறிக்கோள்! இறங்கி அடிக்கும் அண்ணாமலை

By Ajmal KhanFirst Published May 23, 2023, 11:34 AM IST
Highlights

அரை மணி நேர மழைக்கே 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துவிட்டதாக தெரிவித்துள்ள அண்ணாமலை, மத்திய அரசின் திட்டங்களிலும் ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே திமுக குறிக்கோளாக கொண்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி- காற்றில் பறந்த மேற்கூரை

நெல்லை மாநகரப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் பெய்த கனமழையைக்கூடச் சமாளிக்க முடியாமல், பாளையங்கோட்டையில் கட்டப்பட்டிருந்த வ.உ.சி மைதானத்தின் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியிலும், தற்போது திமுக ஆட்சியிலும் முறைகேடு நடப்பதாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேற்கூரை இடிந்து விழுந்ந சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மைதானத்தில்,

அரைமணி நேர மழைக்கு தாங்காத மேற்கூரை

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 14 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேற்கூரை, அரை மணி நேரம் மழைக்குத் தாங்காமல் இடிந்து விழுந்துள்ளது.  இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் இந்த பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டிருந்தாலும், பெருவாரியான பணிகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகே துவங்கியுள்ளது. இந்த மைதானத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து விடுவதற்கு முன்னர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் முதன்மை செயலாளரான அபூர்வா அவர்கள் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வ.உ.சி விளையாட்டு அரங்கத்தின் புதுப்பித்தல் பணியைப் பார்வையிட்ட பின், பணிகள் திருப்திகரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். 8 மாத பயன்பாட்டிற்கு பிறகு இடிந்து விழுந்துள்ளது மேற்கூரை.

மத்திய அரசு திட்டத்தில் ஊழல்

யாரும் இல்லாத நேரத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஜல் ஜீவன் திட்டம் முதல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என, அனைத்து மத்திய அரசின் திட்டங்களிலும் ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது திறனற்ற திமுக அரசு.  பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்த மைதானத்தின் புதுப்பித்தல் பணியைச் செய்தவர் மீதும் இதற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

கோடை மழைக்கே தாக்குபிடிக்காத விளையாட்டு மைதானம்; முதல்வர் திறந்து வைத்த 8 மாதத்தில் சேதம்

click me!