தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை...விடியா அரசின் சாதனை இதுவா... திமுகவை கிழித்த எடப்பாடி பழனிசாமி..

By Raghupati RFirst Published Jan 18, 2022, 6:48 AM IST
Highlights

திமுக ஆட்சியில் காவல்நிலைய இறப்புகள் அதிகரித்து வருவதாகவும், விடியா அரசின் சாதனை இதுவா என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 8 மாதகால விடியா திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளது கண்டு மக்கள் கொதிப்படைந்துள்ளனர். குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும், பொது வெளியில் காவல் துறையினரிடம் மரியாதை குறைவாக நடப்பது மிகவும் அதிகரித்துள்ளது. பல நிகழ்வுகளில் காவலர்கள் தாக்கப்படும் காட்சிகள், காவல் நிலையத்திலேயே சர்வ சாதாரணமாக அதிகாரிகள் மிரட்டப்படும் சம்பவங்கள், சமூக, செய்தி ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதே நேரம், குற்ற வழக்குகளில் ஈடுபடுவோரை பிடிக்கும் ஒருசில காவலர்கள். அவர்களிடம் அத்துமீறும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. 

அந்த நிகழ்வுகளும், சமூக, செய்தி ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வந்த வண்ணம் உள்ளன. இதற்குக் காரணம் காவல் துறையினர் இரவு, பகல் பாராமல் பணியாற்றுவதால் ஏற்படும் மன அழுத்தம்தான். காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மன அழுத்தத்தைக் குறைக்க, மாண்புமிகு அம்மாவின் அரசு பெங்களூரு நிம்மான்ஸ் என்ற மருத்துவமனையுடன் இணைந்து காவலர்களுக்கு புத்தாக்கப் பயிற்சித் திட்டம் மூலம் நடத்தப்பட்ட வகுப்புகள் மற்றும் காவலர்களை சட்டப்படி பணியாற்ற அனுமதித்தது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

ஆனால், இந்த விடியா அரசு வாய்ச் சொல்லில் விரரடி என்பது போல், நேரடியாக புகார்களை வாங்குதல், பெண் காவலர்களுக்கு குறைவான பணிச் சுமை, வார விடுமுறை போன்ற பலவற்றை செய்வதாகக் கூறினாலும், நடைமுறையில் இவை எதுவுமே கடைபிடிக்கப்படுவதில்லை என்று செய்திகள் கூறுகின்றன,

அரசியல் அழுத்தம், பொது வெளியில் ஒருசில காவலர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், சுதந்திரமாக செயல்பட முடியாத நிலைமை, உயர் அதிகாரிகள், நிலுவையில் உள்ள வழக்குகள் மீது விரைவாக முடிவு காணுங்கள் என்று தனக்குக் கீழ் உள்ள காவலர்களுக்கு அழுத்தம் தருதல் போன்றவற்றால் பாதிக்கப்படும் காவலர்கள், காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தங்களது வெறுப்பைக் காட்டும் நிலைமை ஏற்படுவதாக உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர். 

நான், ஏற்கெனவே 7.12.2021 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட ஒருசில சம்பவங்களை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மதுரையில் உறவினர்களுடன் வந்த இளம் பெண்ணை மிரட்டி காவலர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தது. சுல்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர், உடன் பணிபுரியும் காவலர்கள் மீதே புகார் கூறி தற்கொலைக்கு முயன்றது.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் போலீசார் தாக்கியதால் வியாபாரி உலகநாதன் இறந்துவிட்டதாக காவலர்கள் மீது புகார், இராமநாதபுரம், முதுகுளத்தூர் அருகே நீர்கோழி ஏந்தல் என்ற கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவன் மணிகண்டன் காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு, வீட்டில் மர்மமான முறையில் இறந்ததாகப் புகார்.

திருத்தணியில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் இருந்த புளியில் பல்லி இறந்து கிடந்ததை ஊடகங்களுக்குத் தெரிவித்த திரு. நந்தன் என்பவர் மீது ஜாமீனில் வெளிவர இயலாதபடி, வழக்கினை திருத்தணி காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். இதை அறிந்த அவரது மகன் திரு. பாபு என்கிற குப்புசாமி தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டார். தரமற்ற பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தவறை சுட்டிக் காட்டியவர் மீதே காவல் துறை ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்கு பதிவு செய்ததால் ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் பொருட்கள் பெரும்பாலானவை தரமற்றதாக உள்ளதாக அனைத்து இடங்களிலும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

8.1.2022 அன்று சேலம் மாவட்டம், கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பிரபாகரனை, வழக்கு சம்பந்தமாக நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலையக் காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகவும், பிறகு 11-ஆம் தேதி அவரை கைது செய்து நாமக்கல் கிளைச் சிறையில் அடைத்ததாகவும், 12-ஆம் தேதி காலை மாற்றுத் திறனாளி பிரபாகரன் உடல்நிலை மோசமடைந்ததால், அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அன்றே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை.

விடியா அரசில் அதிகரித்து வரும் காவல் நிலைய இறப்புகள்; மனித உரிமை மீறல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திடுக ! pic.twitter.com/yBawTRwlS3

— AIADMK (@AIADMKOfficial)

இதனிடையில் இறந்தவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததுடன், மாற்றுத் திறனாளியின் இறப்புக்குக் காரணமான காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் சரக DIG அவர்கள், சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் மூவரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

12-ஆம் தேதி நடைபெற்ற, இந்த மாற்றுத் திறனாளியின் மரணம் பற்றிய செய்தி 16-ஆம் தேதிவரை மக்களைச் சென்றடையாமல் இந்த விடியா அரசும், காவல் துறையும், ஊடகங்களும் நடந்துகொண்ட முறையைப் பார்க்கும் போது, பத்திரிகை சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசுபவர்கள், தமிழ் நாட்டில் இருந்து மறைந்துவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அதே போல், சென்னையில் முகக் கவசம் அணியாத சட்டக் கல்லூரி மாணவர் மீது அபராதம் விதித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய காவலர்கள், அந்த மாணவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாக செய்திகள் வருகின்றன. இது போன்ற நிகழ்வுகளின் எல்லை மீறல்தான் காவல் நிலைய இறப்புகளாக மாறிவிடும் சூழ்நிலையை உருவாக்குகின்றன. சேலம் மாவட்டம், கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பிரபாகரனின் இறப்புக்கு, தொடர்புடைய காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், அவரது குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாயை அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும்; இந்த விடியா அரசின் தவறினால், தனது இன்னுயிரை இழந்த திருத்தணி திரு. குப்புசாமியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், நான் ஏற்கெனவே கூறியபடி, காவல் துறையில் நேர்மையான அதிகாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு சரியான பணியிடங்களை வழங்குங்கள்; சட்டத்தின் ஆட்சியினை நிலைநிறுத்துங்கள்; தவறு செய்யும் காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன். மேலும், உண்மைச் சம்பவங்களை விமர்சனம் செய்பவர்கள் மீது பொய் வழக்கு போடும் இந்த விடியா அரசை கண்டிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

click me!