
அன்று ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இன்று எடப்பாடி பழனிசாமிக்கும் முதல்வர் பதவி கிடைத்தது என்பது சசிகலா போட்ட தானம். பன்னீரைப் பற்றி ஒரு வார்த்தை வித்தியாசமாக சொல்லியிருந்தால் கூட அவரை தூக்கி எறிந்திருப்பார் அம்மா! ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு இன்று முழு துரோகிகளாகிவிட்டனர்... என்று தினகரன் இரட்டை குழல் துப்பாக்கியை ஒரே புல்லட்டில் சாய்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக சிவகங்கையில் நடந்த விழாவில் பேசியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களை பார்த்து “ நான் 43 ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் விசுவாசியாக இருந்தேன் அதனால்தான் உங்களால் எனக்கு இந்த பதவி கிடைத்துள்ளது.” என்று கசிந்துருகி பேசியிருக்கிறார்.
எடப்பாடி இப்படி பேசும்போதே கூட்டத்தில் ஆங்காங்கேயிருந்து சில விமர்சன குரல்கள் எழுந்தன. இந்நிலையில் நடுநிலை அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் எடப்பாடியை இந்த ஸ்டேட்மெண்டுக்காக விமர்சித்து தூர்வாருவதாக அழுத்திச் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
விரிவாக இதுபற்றி பேசுபவர்கள் “கட்சியில் விசுவாசமாக இருந்தமைக்காக ஏதோ தொண்டர்களால் தான் முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது போல் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அப்படியானால் அன்று கூவத்தூர் ரெசார்ட்டில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பழனிசாமியை முதல்வர் பதவிக்கானவராய் சசிகலா அறிவித்தது ஏன்? சசியை அறிவிக்கவிட்டது ஏன்? அவர் அப்படி அறிவித்ததும் அவர்து காலில் எடப்பாடி விழுந்தது ஏன்?
ஆக சசிகலா நல்லவரோ, இல்லையோ அது வேறு கதை. எடப்பாடியை முதல்வராக தேர்ந்தெடுத்து அறிவித்தது சசிகலாவும், தினகரன் உள்ளிட்டோரும்தான். இந்த உண்மையை மிகச் சாதாரணமாக மறுத்துவிட்டு, மறைத்துவிட்டு எடப்பாடி பேசுவது மோசமான முன்னுதாரணம்.
சசி காலில் விழுந்தது ஏன்? என்பதற்கு காரணம் சொல்லிவிட்டு எடப்பாடி என்ன வேண்டுமானாலும் பேசட்டும் என கேட்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.” என்கிறார்கள்.
சொல்லுங்க எடப்பாடி, சொல்லுங்க!