
சசிகலா ஓபிஎஸ்சுக்கு இடையே யாருக்கு கட்சி என்ற அதிகார சண்டையில் அசைக்க முடியாத கட்சியான அதிமுகவை ஒட்டுமொத்தமாக வீழ்த்தி விட்டனர் என மன வேதனை அடைந்துள்ளனர் எம்ஜிஆர் ஜெயலலிதா தொண்டர்கள்.
ஒரு கட்சியை ஆரம்பிப்பது கடினம் அதே கட்சி ஆட்சியை பிடிப்பது என்பது மிக கடினம்.. 40 ஆண்டுகளாக அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பது அதை விட மிக மிக கடினம்.
இவ்வளவு கடினங்களையும் சோதனைகளையும் தாண்டி எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கட்சியை நடத்தினர்.
அதிமுக என்னும் ஆலமரத்தால் 1.4 கோடி தொண்டர்களை உள்ளடக்கி தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அதிசய சக்தி இது.
2011, 2016 இரண்டு முறை தொடர் ஆட்சி, உள்ளாட்சியில் ஒட்டு மொத்த வெற்றி, கூட்டுறவு துறையில் கொத்து கொத்தாக அள்ளிய பதவிகள்.. நாடாளுமன்ற தேர்தலில் 2 இடத்தில மட்டும் தோல்வி,37 எம்பிக்கள் என்ற வகையில் இந்தியாவிலே 3வது பெரிய கட்சி.
ஏற்காடு இடைதேர்தல் தொடங்கி அரவக்குறிச்சி, தஞ்சாவூர்,திருப்பரம்குன்றம் வரை தோல்வியே பார்த்திடாத வெற்றி.. இப்படி வெற்றி.. வெற்றி.. வெற்றி என அடுக்கி கொண்டே செல்லும் அளவுக்கு அளப்பரிய சாதனைகளை கொண்டது தான் அதிமுக.
திமுகவின் படுபயங்கர அரசியல் மத்தியில் ஆளும், ஆண்ட காங்கிரஸ் பாஜக குடைச்சல் கொடுக்கும் குட்டி கட்சிகள், உட்கட்சி துரோகங்கள் என பல தடைகளை பின் இழுப்புகளை கடந்து தான் இந்த வெற்றிகள் ஜெயலலிதாவுக்கு சாத்தியமானது.
எம்ஜிஆர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் முக வசீகரம் பேச்சாற்றல் அதிரடி முடிவுகள்தான் இந்த அசுர வளர்ச்சிக்கு காரணம் என்றாலும் செந்தில் பாலாஜி, எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், ஆதி ராஜாராம் போன்ற ஆயிரக்கணக்கான செயல் வீரர்கள் சுற்றி சுழன்று வெற்றிக்கனியை ஜெ.வின் காலடியில் சமர்ப்பித்தனர்.
இப்படி திமுக போன்ற எதிர்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அதிமுக சசிகலா பன்னீருக்கு இடையே சிக்கி சின்னபின்னாமாகி கொண்டிருக்கிறது.
ராணுவ கட்டுப்பாடு ராணுவ கட்டுப்பாடு என மூச்சுக்கு 300 தடவை முழங்கும் அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ் சசிகலாவின் செய்கையால் நிலைகுலைந்து போயுள்ளனர்.
தற்போது ராணுவ கட்டுப்பாடெல்லாம் மலையேறி பொய் விட்டது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற ரேஞ்சுக்கு இறங்கி விட்டது அதிமுகவின் நிலைமை.
பல பெருமைகளை பெற்று தந்த அதிமுக என்னும் ஆலமரத்தில் தனிப்பட்ட இரு நபர்களின் சுய லாபங்களுக்காக கட்சியை கூறு போட்டு விட்டார்களே என கொதிக்கின்றனர் ஜெ வின் உண்மை விசுவாசிகள்.
ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல மக்களின் பெரும்பான்மை பலத்தை கொண்ட அதிமுக 3ஆக சிதறி உள்ளதால் இரண்டவது இடத்தில் அதிக தொண்டர்கள் பலம் கொண்ட திமுக எளிதில் வெற்றி பெரும் என்ற கவலையும் தெரிவிகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.