
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள், வைணவர்களுக்கு மட்டும் தாயார் அல்ல என்றும் வைரகவிஞர்களுக்கும் தாயார்தான் என்று நடிககை கஸ்தூரி கூறியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் குறித்து கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம், கடவுள்களுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் கருத்து தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் எவரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல என்றும், புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்றும் பதிவிட்டிருந்தார். ஆனாலும், கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. பாஜகவைச் சேர்ந்தவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜகவினர், கவிஞர் வைரமுத்து குறித்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும் கருத்துக்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வைரமுத்துவுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், அனைவரும் கண்ணியம் காக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அனைத்து மத ஆன்மீக உணர்வுகளையும் நாம் மதிக்க வேண்டும். தாயார் ஆண்டாள் இறையருள் பெற்ற கவி. ஆழ்வார்களில் ஒருவராக போற்றப்படுகிறார். யாரோ வெளி நாட்டில் எழுதிய கட்டுரை தேவையற்றது. கவிப்பேரரசு மன்னிப்பு கேட்பதும், அந்த பெருங்கவியை மன்னித்தலும் பண்பாடு என்று டுவிட்டரில் விவேக் பதிவிட்டுள்ளார்.
ஆண்டாளை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் அது ஆண்டாளுக்கு செய்யும் அநீதி என நடிகை கஸ்தூரி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பண்டைய இந்து மதம் சார்ந்த நாகரிகங்களில், தேவதாசி என்பவள் கடவுளுக்கு மட்டுமே கடமைப்பட்டவள். ஆணுக்கு அடங்கி அடிபணிய தேவையில்லாத மிக உன்னத சமூக அந்தஸ்தையும் மரியாதையும் பெற்றவள். பண்டைய கிரேக்கத்திலும் 'vestal virgins " உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டாள் தேவதாசியாக இருந்திருந்தால், அது அந்த காலக்கட்டத்தில் மானக்கேடு அல்ல. அரிய கௌரவம். கோயிலுக்கு மட்டுமே தொண்டாற்றிய பல கலைஞர்கள் காலப்போக்கில் நலிந்து விட்டார்கள். தேவதாசி குலம் தெருவுக்கு வந்து விட்டது.
எனினும் தேவர் அடியாள் என்றால் விபச்சாரி என்ற கருத்து வேரூன்றியது. 1950 ஆம் ஆண்டுகளுக்கு பிறகுதான், தேவர் அடியார் என்றால் கெட்ட வார்த்தை என்று பேசுபவருக்கு இந்து சமய சமூக வரலாறு சரியாக தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும்.
இதைச் சொன்னால் உடனே எனக்கும் தேவதாசி, விபச்சாரி போன்ற பட்டங்கள் சூட்டுவார்கள். நீ உத்தமியா என்று ஏசுவார்கள். என் ஜாதியை அலசுவார்கள்.
ஏன் என்றால் இங்கு பெண் பேசுவதே பெருங்குற்றம். உண்மையை ஆராய்ந்து சொல்வது ஊர்மேய்வதற்கு ஒப்பு. மெய்ப்போருள் காண்பது ஒழுக்க குறைவு. தமிழை நேசிப்பதும் கலையை விரும்புவதும் களவாணித்தனம். சினிமாக்காரி மதத்தையோ தமிழையோ பற்றி வாயைத் திறப்பது தேசத்துரோகம்.
இருபத்தோராம் நூற்றாண்டில் இன்னும் நம்மை இறுக்கிப் பிடித்திருக்கும் பெண்ணடிமை, ஜாதி தளைகளை ஒரு குழந்தை அனாயாசமாக வென்றதே அன்று! அந்த சூடிக்கொடுத்த சுடர்க்கொடி வைணவர்களுக்கு மட்டும் தாயார் அல்ல, வைர கவிஞர்களுக்கும் தாயார்தான். ஆண்டாளை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் அது ஆண்டாளுக்கு செய்யும் அநீதி என்றும் கஸ்தூரி கூறியுள்ளார்.