"அம்மா கொடுத்த மரியாதை இப்போது அங்கு இல்லை" தாமரை நிழலில் தஞ்சமடைந்த பொன்னம்பலம்

First Published Jun 14, 2017, 7:20 PM IST
Highlights
Actor Ponnambalam Joined BJP


ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் இருக்கும் சினிமா நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். ராதாரவி, ஆனந்தராஜ், பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி என இந்தப் பட்டியல் நீளும். இந்த வரிசையில் லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார் நடிகர் பொன்னம்பலம்.  அம்மா கொடுத்த மரியாதை இப்போது அங்கு இல்லை என்று சீனியர்கள் சொன்ன அதே காரணத்தை தான் பொன்னம்பலமும் சொல்லி இருக்கிறார்.

கட்சியில் இருந்து விலகியவர்களில் ராதா ரவி திமுகவில் சேர, பாத்திமாபாபு, நிர்மலா பெரியசாமி் ஆகியோர் ஓ.பி.எஸ். அணியில் ஐக்கியமாக, ஆனந்தராஜ் மட்டும் எந்தக் கட்சியிலும் சேராமல் நடந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா வந்திருக்கேன்ல என்று தனக்கே உரிய வில்லத்தனத்துடன் பா.ஜ.க.வில் இணைந்து அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார் நடிகர் பொன்னம்பலம். அதிமுகவில் இருந்து விலகியது முதல் பா.ஜ.க.வில் இணைந்தது வரை இடையே நடந்தவற்றை இவர் விளக்கிய பாங்கு ஆஹா…. அடடா ரகம்…

"முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஒட்டுமொத்த  தமிழகமே இடி விழுந்ததுபோல இருக்கிறது. பிணக்காலும் பிளவாலும் பிரிந்த இரண்டு அணிகளும் ஒன்று சேருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இதுவரை நடக்கவில்லை. 

இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களும்  ஒருவருக்கொருவர் குறை சொல்லிப் பேசிக்கறாங்க. ஊரில் எந்த நல்ல செய்தியும் இல்லை. யோசனை செய்து கொண்டே இருந்தேன். மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இரண்டு அணிகள் சேர்ந்தால் நான் ஏன் பா.ஜ.க பக்கம் போகப் போகிறேன்? விடைத்தெரியாமல்தான் இங்கு வந்துள்ளேன். பா.ஜ.க. கொடுக்கும் கடமையை சரியாக செய்வேன்". 

“அம்மா இருந்த போது கிடைத்த மரியாதை இப்போது அங்கு இல்லை.. என்னைப் போல பலர் இதே நிலைமையில்தான் உள்ளனர். நான் ஒன்றும் வெளிநாட்டு கட்சியில் சேரவில்லை. இந்திய மக்கள் ஏற்றுக் கொண்ட பா.ஜ.கவில்தான் சேர்ந்தேன். அ.தி.மு.க.வை விமர்சிக்க மாட்டேன்.

அது முறையல்ல. 2011 ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் செயல்பட்டு வந்தேன். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை என்னைப் போன்றவர்களுக்கு நல்ல மரியாதை இருந்தது"

“இன்று காலையில்கூட, தினகரனைச் சந்திக்கலாம்' என்றுதான் இருந்தேன். மனம் மாறியதால் பா.ஜ.கவில் சேர்ந்துவிட்டேன். கூவத்தூரில் எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லமுடியவில்லை. பணம் கொடுத்தார்களா என்று தெரியவில்லை.” இப்படியாக பா.ஜ.க.வில் சேர்ந்தது குறித்து ஸ்லாகித்தும் சாரி சொல்லும் விதமாகவும் கலகலவென பேசியிருக்கிறார் பொன்னம்பலம்

click me!