முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கருப்புக்கொடி... பிரபல நடிகரை கைது செய்த காவல்துறை!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 25, 2021, 4:03 PM IST
Highlights

 முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட கருணாஸ் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே ஜனநாயக திருவிழா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே களைக்கட்டத் தொடங்கியுள்ளது. அதிமுக சார்பில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டும் வருகிறது. 


இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட திட்டமிட்ட கருணாஸை போலீசார் கைது செய்துள்ளனர். அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் விரக்தியின் விளிம்பிற்கு சென்ற கருணாஸ், அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்தார். அதன் பின்னர் திமுக தலைமைக்கு தாமாகவே ஆதரவு கடிதம் மூலம் தூது அனுப்பினார். ஆனால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஓவர் என அறிவாலயத்தின் கதவும் அடைக்கப்பட்டது. இதனால் கடுப்பான கருணாஸ் திமுகவிற்கான ஆதரவு கடிதத்தை வாபஸ் பெற்றதாக அறிவித்தார். 

மேலும் முக்குலத்தோர் சமூகத்தை அவமதித்த அதிமுகவிற்கு தக்க பாடம் புகட்டும் வகையில் அக்கட்சியை தோற்கடிக்க பிரசாரம் மேற்கொள்ள வேண்டுமென அவர் சார்ந்த சமூக மக்களிடமும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினருக்கும் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இன்று சிவகங்கையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட கருணாஸ் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்து கொண்ட போலீசார், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினைச் சேர்ந்த கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!