உணவகத்தை அபகரித்து பாஜக சேவை மையம் தொடங்கிவிட்டனர்.! அண்ணாமலை மீது போலீசில் புகாரளித்த மாஜி நிர்வாகி

By Ajmal KhanFirst Published May 25, 2023, 2:48 PM IST
Highlights

எனது உணவகத்தில் இருந்த பொருட்கள் மற்றும் பணத்தை திருடிவிட்டு அந்த இடத்தில் பாஜக சேவை மையம் தொடங்கி விட்டதாகவும், பாஜக மாஜி மாநில நிர்வாகி அண்ணாதுரை புகார் அளித்துள்ளார். மேலும் கடையை ஆக்கிரமிப்பு செய்ததில் அண்ணாமலைக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  

 உணவகத்தை அபகரித்த பாஜக நிர்வாகிகள்

பாஜகவின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக இருந்தவர் ஐஎஸ்ஓ அண்ணாதுரை,  கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி அண்ணாதுரையை கடந்த 21 ஆம் தேதி கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இவர் கோயமுத்தூர் சாய்பாபா காலனி பகுதியில் பழைய சோறு டாட் காம் என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்துள்ளார்.  மூலிகை பொருட்களும் வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் தனது உணவகத்தை பாஜக நிர்வாகிகள்,  மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தல் காரணமாக உணவகத்தை  சூரையாடியுள்ளதாகவும், கடையில் இருந்த ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் லட்சக்கணக்கான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பணம், பொருட்கள் திருட்டு

அண்ணாதுரை அளித்துள்ள புகாரில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை  உத்தரவின் பேரில் மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி முன்னிலையிலும்,  மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில் அவர்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் என் அலுவலகம் வந்து என் அலுவலகத்தின் கேட்டு மற்றும் கதவு பூட்டுகளை உடைத்து சுமார் 20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அள்ளிச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும்  எனது உணவகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பெயர் பலகையும் கொடியையும் நட்டு வைத்து கட்சி அலுவலகமாக மாற்றி விட்டதாக புகார் கூறியுள்ளார், இந்த சம்பவத்தில் உணவக பீரோவில் இருந்த பணத்தையும் திருடி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். உணவகம் சூறையாடப்பட்ட சம்பவத்தை அறிந்து அங்கு சென்ற போது  சுமார் 20க்கும் மேற்பட்ட  குண்டர்கள் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி,

அண்ணாமலைக்கு தொடர்பு

இது எங்களுடைய இடம், இதற்கும் உனக்கும் இந்த இடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எதுவாக இருந்தாலும் எங்கள் மாவட்ட தலைவர் அல்லது மாநிலத் தலைவரிடம் பேசிக் கொள் என மிரட்டியதாக கூறியுள்ளார்.  எனவே அனது கடையில் இருந்து திருடப்பட்ட பொருட்கள், பணம் மற்றும் ஆவணங்களை மீட்டு தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ள அனைவரும் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து என் உயிருக்கும் எனது உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி  தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்

தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடும் திமுக.!தமிழ் வழி பொறியியல் படிப்பை நிறுத்தியது ஏன்.? அண்ணாமலை

click me!