122 ஆண்டுகளில் இல்லாத கனமழை! எங்கு பார்த்தாலும் வெள்ளம்! விவசாயிகள் கலங்கி போய் இருக்காங்க! கதறும் வேல்முருகன்

By vinoth kumarFirst Published Nov 14, 2022, 8:17 AM IST
Highlights

வேளாண் பயிர்கள் தண்ணீரில் முற்றிலுமாக அழிந்து போவதை, கண்ணால் காணும் விவசாயிகள்,  கடன்காரர்களுக்கு என்ன செய்வது என்று அஞ்சியே கடந்த காலங்களில் பெரும்பாலும் உயிர் விட்டிருக்கிறார்கள். 

மழை நீரில் மூழ்கி வேளாண் பயிர்களுக்கு, ஏக்கருக்கு 25,000 ரூபாயும், கடன் சுமையால் கிக்குண்டு, சாகுபடி செய்ய முடியாமல் தரிசாய் போட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு 15,000 ரூபாயும் தமிழக அரசு வழங்க வேண்டும் என வேல்முருகன் கோரிக்கை வைத்துள்ளார். 

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில், ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்து இருப்பதை கண்டு, விவசாயிகள் கலங்கி போய் நிற்கின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக, கடலூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில், 45 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நெல், உளுந்து, வாழை, மரவள்ளி உள்ளிட்ட ஏனைய பயிர்கள், மழைநீரில் மூழ்கியுள்ளன. 15க்கும் மேற்பட்ட கால்நடைகளை பொதுமக்கள் இழந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழையால், எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக, சீர்காழியில் மட்டும் 44 செ.மீ மழை கொட்டியுள்ளது.

இதையும் படிங்க;- மழையால் விவசாய நிலங்கள் பாதிப்பு..! ஏக்கருக்கு 30ஆயிரம் வழங்கிடுக..! தமிழக அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை

இதன் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், வாய்க்கால் கரை வழிந்தும், உடைந்தும், விளைநிலங்களிலும், குடியிருப்புகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. விளைநிலங்களில் தேங்கியுள்ள மழை நீரை, விரைவில் வடிக்க முதல்வர் அவர்கள் உத்தரவிட்டிருப்பது வரவேற்தக்கது. ஆனால், மழை தொடர்ந்து பெய்து வருவதால், விளைநிலங்கள், வடிகால்களில்  நிரம்பி உள்ள தண்ணீர் வடிவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதனால், பயிர்கள் முழுமையாக அழிந்து விடும். அதன்பின் நெற்பயிரை புதிதாகத் தான் நட வேண்டும். விதை, உரம், மனித உழைப்பு ஆகியவற்றுக்காக ஏக்கருக்கு ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை செலவாகும். ஏற்கனவே விவசாயிகள் கடன் வாங்கித் தான், விவசாயிகள் சாகுபடி செய்திருப்பார்கள். இந்த நிலையில் ஏக்கருக்கு மீண்டும் 18,000 செலவு செய்வது விவசாயிகளுக்கு சாத்தியமாகாது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் உரிய இழப்பீடு வழங்கவில்லை. அதன் காரணமாக, கடன் வாங்கி விவசாயம் செய்த உழவர்கள் கடன் வலையில் சிக்கியுள்ளனர். வேளாண் பயிர்கள் தண்ணீரில் முற்றிலுமாக அழிந்து போவதை, கண்ணால் காணும் விவசாயிகள்,  கடன்காரர்களுக்கு என்ன செய்வது என்று அஞ்சியே கடந்த காலங்களில் பெரும்பாலும் உயிர் விட்டிருக்கிறார்கள். எனவே, காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் வட கிழக்கு பருவமழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு போதிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் உழவர்களின் கூட்டுறவுக் கடன்களையும், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கடன்களையும் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்க்கடன்கள் மட்டுமின்றி, வேளாண் பணிகளுக்காக, உழுவை எந்திரம் உட்பட எந்தக் கடன் வாங்கியிருந்தாலும், அந்தக் கடனை தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து, பயிர்க் காப்பீட்டு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க;-  122 ஆண்டுகளில் இல்லாத மழை பதிவு.. சீர்காழியை சீரழித்த பேய் மழை.. வானிலை மையம் ஷாக் ரிப்போர்ட்..!

மழை நீரில் மூழ்கி வேளாண் பயிர்களுக்கு, ஏக்கருக்கு 25,000 ரூபாயும், கடன் சுமையால் கிக்குண்டு, சாகுபடி செய்ய முடியாமல் தரிசாய் போட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு 15,000 ரூபாயும் தமிழ்நாடு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். உழைக்கும் மக்களுக்காகவே அவதாரம் எடுத்ததுபோல், அன்றாடம் சொற்பொழிவு மழை பொழிந்து கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி போதிய நிதியை, உடனடியாக வழங்க முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது என வேல்முருகன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-   அதிமுக ஆட்சியில் ஒருவருக்கு பல டெண்டர்..! திட்டங்களுக்கு சரியாக நிதியும் ஒதுக்கவில்லை- எ.வ.வேலு குற்றச்சாட்டு

click me!