விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் அறிவியுங்கள்… தமிழக அரசுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்

By Narendran SFirst Published Nov 13, 2022, 10:03 PM IST
Highlights

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண பணிகளை செய்திட வேண்டும் என்று கட்சி தொண்டர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை செய்திட வேண்டும் என்று கட்சி தொண்டர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவ மழை தமிழகமெங்கும் மிகப்பெரிய அளவில் பெய்து வருகிறது. அவ்வப்போது புயல் உருவாகிற காரணத்தினால் மழை தீவிரமடைந்து வருகிறது. எதிர்பார்த்ததை விட மழை பெய்யும் அளவு அதிகரித்து இருக்கிற காரணத்தினால் ஏரிகள் நிரம்பி உபரி நீர் பல்வேறு பகுதிகளில் திறந்து விடப்பட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் உள்பட டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும், ஒரு லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நெல் மற்றும் விவசாய பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு மிகப்பெரிய வேதனை அளித்துள்ளது. சென்னை மற்றும் பல்வேறு நகர்ப்புற பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மக்களின் அன்றாட பணிகள் முடக்கப்பட்டுள்ளன. வீடுகள் நிறைந்த பகுதிகளும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கனிம வளக்கொள்ளையை தடுத்து நிறுத்துங்கள்… திமுக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!!

ஆங்காங்கே புதிய கால்வாய்கள் அமைக்கும் பணிகள் முடிவடையாமல் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நீர் பள்ளங்களாக மாறி உள்ளன. மேலும் மழை தொடரும் வாய்ப்பு அதிகமாக உள்ளதால் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய தருணம் இது. முதல்வர் நேரில் சென்று பார்வையிடுவது மட்டும் போதாது அத்துனை அரசு எந்திரங்களும் உடனடியாக முடுக்கிவிட வேண்டும். விவசாயிகளுக்கு உடனடியாக ஒரு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரண தொகையாக அறிவிக்கப்பட வேண்டும். அதில் முதல் கட்ட நிவாரண தொகையை அவர்கள் வங்கி கணக்கில் தமிழக அரசு உடனடியாக செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.  இந்த அறிக்கையின் வாயிலாக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளுக்கு 77 சில வேண்டுகோளை முன்வைக்கிறேன். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழையால் மக்கள் பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதற்கு முன் வெள்ளம் ஏற்பட்ட காலங்களிலும், கொரோனா பாதிப்புகளால் மக்கள் வேலை வாய்ப்பு இன்றி தவித்த காலங்களிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்காங்கே மோடி கிச்சன் அமைத்து உணவு மற்றும் உடை, நிவாரண உதவி பொருட்கள், மருத்துவ உதவிகள் வழங்கி மக்களுக்காக உழைத்தவர்கள் நாம். நமது கட்சியின் முக்கிய கொள்கையே சேவை செய்வதுதான்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா செய்தார்கள்.. எடப்பாடி செய்யவில்லை.! அதிமுக வரலாற்றை சொன்ன பண்ருட்டி ராமச்சந்திரன்

எனவே, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். ஆங்காங்கே மோடி கிச்சன் என்ற உணவு தயாரிக்கும் கூடங்களை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க வேண்டும். எவர் ஒருவரும் பசியால் வாடக்கூடாது. அந்தந்த பகுதிக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு திட்டமிட வேண்டும். அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய பணிகளை உடனடியாக கொண்டு செல்லவேண்டும். மருத்துவ பிரிவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கிட வேண்டும். மக்களின் நண்பர்களாக உறவினர்களாக இருந்து அவர்கள் கஷ்டத்தை போக்கும் வகையில் நிவாரண பணிகளை செய்திட வேண்டுமென்று பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

click me!