உங்கள் வீட்டில் "பூஜை அறை" உள்ளதா ?இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா...

First Published Sep 28, 2017, 4:25 PM IST
Highlights
We must need prayer room in home


 உங்கள் வீட்டில் "பூஜை அறை" உள்ளதா ?இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா...

பெரும்பாலான  இல்லங்களில் பூஜை அறை என்றோ விளக்கு ஏற்றி வைத்து சுவாமி படங்கள் வைக்கப்பட்ட மாடங்கள் என்றோ நிச்சயம் இருக்கும். தினமும் அங்கே விளக்கு ஏற்றப்படும். கடவுளை தியானிக்க வசதி செய்யப்பட்டிருக்கும். அந்த இடத்தில், தினமும் இறைவன் நாமத்தை உச்சரித்து வழிபடும் ஜப வேள்வி, பூக்கள் கொண்டு பூஜித்தல், ப்ராணாயாமம் செய்தல், மனத்தில் தியானம் செய்தல், சுலோகங்கள் சொல்லி வழிபடுதல், வேதம் பிரபந்தம் தேவார திருவாசகங்கள் பாராயணம் செய்தல், தெய்வப் பாடல்களைப் பாடித் துதித்தல் போன்றவற்றை அந்த பூஜையறையில் செய்து வருகிறார்கள். அதுபோல், பிறந்த தினங்கள், திருமண நாட்கள், சிறப்பு விழாக்கள் என்றால், அந்த பூஜையறையே களைகட்டும். அலங்காரங்கள் என்ன, பூக்களின் வாசனைகள் என்ன, ஊதுபத்தி மணம் கமழ, மாவிலைத் தோரண அலங்காரத்தில் பூஜையறை புனிதத்துவம் நிறைந்ததாகக் காட்சியளிக்கும். குடும்பத்தின் உறுப்பினர் அனைவருமே அங்கே ஒன்றாகக் கூடி இறை வழிபாட்டை மேற்கொள்வர். 

நம் வீடுகளில் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ப ஒவ்வொரு அறைகளை அமைப்பது வழக்கம். பழங்காலத்து வீடுகளில் தொடங்கி, இந்தக் கால நவீன கட்டடங்களிலும் இப்படி தனித்தனி அறைகள் அமைக்கும் பழக்கம் உள்ளது. சமைப்பதற்கு என்று சமையலறை(கிச்சன்), உணவு அருந்த சாப்பாட்டு அறை(டைனிங் ஹால்), இரவு தூங்க படுக்கையறை(பெட் ரூம்), குளிப்பதற்கு என்று குளியலறை(பாத் ரூம்), வரும் விருந்தினர்களை வரவேற்று உபசரிக்க என்று வரவேற்பறை(ட்ராயிங் ரூம்) என்று பல அறைகளை அமைக்கிறோம். ஒவ்வொரு அறையுமே அவற்றை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இருக்கின்றனவே. அப்படி இருக்கும்போது, இறைவனை வழிபடுவதற்காக என்று பூஜையறை(ப்ரேயர் ரூம்) கட்டாயம் அமைக்க வேண்டுமல்லவா?!

எனவே நாம் இவை நமது பொருட்கள் என்றோ, நம்முடையதுதான் எல்லாம், நாம் சம்பாதித்தது இவை என்றோ எண்ணும் அகங்காரத்தைக் கைவிட இறைவழிபாடுதான் உதவுகிறது. 
நம் குடும்பத்தினரையும் நம்மையும் காப்பவரும் அவரே. வீட்டின் பிரதான அறையாகத் திகழும் பூஜையறையை நாம் இறைவனுக்காக ஒதுக்கி, அவரை எண்ணித் துதிக்க வேண்டும். எப்படி விருந்தினரை வரவேற்று உபசரிக்க என்பதற்காக வரவேற்பறை அமைத்து அவர்களை வரவேற்று மகிழ்வோமோ, அதுபோல், இறைவனையும் நாம் பூஜையறைக்கு வரவேற்க பூஜை செய்யவேண்டும். நம் உள்ளத்து உணர்வுகளோடு கலந்த உண்மை இது. எனவே, நாம் பூஜையறையை நன்கு சுத்தமாகப் பராமரித்து, அழகுபடுத்தி வைக்க வேண்டும். கடவுளின் கருணையில்லாமல் எதுவும் இல்லை.

எனவே அவரிடம் நாம் பிரார்த்தனை செய்து வேண்டிக்கொள்ள வேண்டும். பூஜை அறை, நாம் முன்னேற்றம் அடைவதற்குத் தூண்டுகின்ற அதிர்வலைகளை உள்ளடக்கியதாக அமையும்.
ஒலிக்கு அழிவில்லை என்பார்கள். ஒலி அலைகள் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கும். மந்திர ஒலிகளும், நம் உள்ளத்தில் ஆத்மார்த்தமாக எண்ணுகின்ற தூய எண்ணங்களும் அந்த பூஜையறைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கும். எவர் வெகுநேரம் பூஜையறையில் அமர்ந்து தியானிக்கிறார்களோ, மந்திரங்கள், தோத்திரங்கள் சொல்லி வண்ங்குகிறார்களோ அவர்களது விருப்பங்கள் நிறைவேற அந்த எண்ணங்களே துணைபுரியும். இறைவழிபாட்டின் மூலம் இது சாத்தியம். இந்த பூஜையறையில் இந்தப் புனிதச் செயல்கள் செய்து செய்து, அந்த அறையே புனிதத்துவம் நிறைந்ததாக ஆகிவிடும். என்றாவது நமக்கு மனநிலை கொள்ளாமல் தவித்தாலோ, உள்ளம் வாடியிருந்தாலோ, உடல்நிலை சரியில்லாமல் போனாலோ, பூஜையறையில் சாதாரணமாக சில நிமிடங்கள் அமர்ந்திருக்கும்போதே அனைத்தும் சரியாவதை உணரலாம்.    

இந்த  நம்பிக்கை தான்  பலரையும் இன்னும்  உறுதியான  மன  வலிமையுடன்  வாழ வைக்கிறது.பூஜை அறை இருந்தாலே, அங்கு ஒரு  விதமான  சக்தியை  உணர  முடியும்
 

click me!