தமிழகத்தில் 4 நாட்களில் மட்டும் வசூலான கொரோனா அபராதம் எவ்வளவு கோடி தெரியுமா?
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை தற்போது 4 ஆயிரத்தை கடந்துள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ.200ம், பொது இடங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், எச்சில் துப்பினாலும் ரூ.500ம் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இதேபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அப்படி தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை மீறுவோரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை வசூலான அபராதத் தொகை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக 2 கோடியே 52 லட்சத்து 34 ஆயிரத்து 900 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தெற்கு காவல்துறை மண்டலத்தில் மட்டும் அதிக அளவாக ரூ.85.74 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தனிமனித இடைவெளியை பின்பற்றாத காரணத்திற்காக தமிழகம் முழுவதும் 6,465 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோரை தமிழக காவல்துறை கடுமையாக கண்காணித்து வருகிறது. தமிழக காவல்துறையின் 4 மண்டலங்களிலும் ஒவ்வொரு காவல் ஆய்வாளர் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டு, காலை மற்றும் மாலையில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.