Maha shivaratri: மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று முதல் சதுரகிரிக்கு செல்ல அனுமதி..! பக்தர்கள் குஷி!

By Anu KanFirst Published Feb 28, 2022, 6:43 AM IST
Highlights

Maha shivaratri: மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று முதல் வரும் 3-ந் தேதி வரை பக்தர்களுக்கு சதுரகிரிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை சிவராத்திரியாக ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறோம்.  அந்த வகையில், இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று முதல் வரும் 3-ந் தேதி வரை பக்தர்களுக்கு சதுரகிரிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு வருடமும் வரும் மகா சிவராத்திரி தினத்தன்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதன்படி, இந்த ஆண்டு வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மகா சிவராத்திரி வருகிறது. இதையொட்டி சதுரகிரி கோவிலுக்கு திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரசித்திபெற்ற சுந்தர- சந்தன மகாலிங்கம் கோவில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோ‌ஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் திரளான பக்தர்கள் வருகை தருவார்கள். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் மலைக்கு செல்ல மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, மகா சிவராத்திரி, பிரதோ‌ஷம், அமாவாசையை முன்னிட்டு வருகிற 28ம் தேதி (திங்கட்கிழமை) அதாவது இன்று முதல் 3-ந் தேதி (வியாழக்கிழமை) வரை சதுரகிரிக்கு செல்ல கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கண்ட நாட்களில் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற வேண்டும். பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்க அனுமதி இல்லை. மலையேறும் பக்தர்கள் அங்குள்ள நீரோடைகளில் குளிக்க கூடாது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மாகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என்ற காரணத்தால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலை அடிவாரம் மற்றும் கோவில் பகுதியில் செய்யப்பட்டுள்ளது. சிவராத்திரி தினமான 1-ம் தேதி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு விடிய விடிய இரவு முழுவதும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க...Today astrology: சனியின் பிடியில் சுக்கிரன்...தலைவிதி மாற்றத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் 7 ராசிகள்..!!

click me!