மாட்டுப் பொங்கல் 2024 : மாட்டுப் பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் முக்கியத்துவம் என்ன?

By Ramya sFirst Published Jan 3, 2024, 1:04 PM IST
Highlights

இந்த பதிவில் மாட்டுப் பொங்கலின் முக்கியத்துவம் குறித்தும் அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் பார்க்கலாம்.

தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை உழவர்களின் வாழ்வுடன் பிண்ணிப்பிணைந்த திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இது உழவர் திருநாள் என்றும் அறுவடை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு ஆகிய பாடல்களில் தை மாத நீராடல் பற்றிய குறிப்புகள் உள்ளதால் சங்ககாலம் முதலே தைப்பொங்கல் கொண்டாடாப்பட்டதை தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் மாட்டுப் பொங்கலின் முக்கியத்துவம் குறித்தும் அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் பார்க்கலாம்.

போகி

போகி, தை பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 14ம் தேதி போகியும், 15-ம் தேதி தைப் பொங்கலும், 16-ம் தேதி மாட்டுப்பொங்கலும், 17-ம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.

போகியின் போது வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றி, வீட்டிற்கு வெள்ளையடித்து பொங்கல் பண்டிகைக்கு உழவர் பெருமக்கள் தயாராகி வருகின்றனர். அப்படி வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை எரிக்கும் பண்டிகையாக போகிப் பண்டிகை உள்ளது.

 

பொங்கல் 2024 : தேதி, வரலாறு, முக்கியத்துவம், கொண்டாட்டங்கள் மற்றும் பல...

பொங்கல் :

அறுவடை செய்த புதுநெல்லை கொண்டு வந்து புது அடுப்பில் சூரியனை பார்த்து பொங்கல் வைத்து வழிபாடுவார்கள் பொங்கல் பானையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட மஞ்சள், இஞ்சி கொத்துகள் கட்டி, அறுவடை செய்த புதிய காய்கறிகளை சமைத்து சூரியனுக்கு படைத்து வழிபடுவார்கள்.

மாட்டுப்பொங்கல் :

விவசாயத்தில் மாடுகளின் பங்கு இன்றியமையாதது. இத்தகைய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விழாதான் மாட்டுப்பொங்கல். மாடுகள் இல்லாமல் பல்லாயிரம் ஆண்டுகள் விவசாயம் செழித்திருக்க முடியாது. மாட்டு சாணம், சிறுநீர் ஆகிய விவசாய இடுபொருட்களுக்கும், அறுவடை செய்த நெல்லை போரடிகவும், நெல்லை வீட்டில் கொண்டு வந்து சேர்க்கவும் மாடுகள் பயன்படுத்தப்பட்டன. எனவே விவசாயத்தில் ஒவ்வொரு படி நிலையிலும் உதவி செய்யும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பழங்காலம் முதலே மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாட்டுப்பொங்கல் அன்று மாடுகள் வசிக்கும் தொழுவத்தை சுத்தம் செய்து, மாடுகளை குளிப்பாட்டி அவற்றின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். மேலும் மாடுகளின் சலங்கைகளும் கட்டப்படும். மேலும் மாடுகளுக்கு புதிய மூக்கணாங்கயிறு, தாம்பு கயிறு ஆகியவற்றை அணிவித்து பொங்கல் வைத்து வழிபடுவது தான் மாட்டு பொங்கல். உழவுக்கு உதவும் கருவிகளையும் சுத்தம் செய்து சந்தன் குங்குமம் வைத்து மாடுகளுடன் சேர்ந்து அவற்றையும் வழிபாடுவர்கள்.

மாட்டுப் பொங்கல் அன்று மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படும். மாட்டுப்பொங்கல் அன்று தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற வீர விளையாட்டுகள் உற்சாகமாக நடைபெறும். இந்த வீர விளையாட்டில் ஏறக்குறையை அனைத்து இளைஞர்களையும் கலந்து கொள்வார்கள். ஜல்லிக்கட்டு தொடர்பான குறிப்புகளும் தமிழ் இலக்கியங்களில் ஏறு தழுவுதல் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க இலக்கியமான முல்லைக்கலி, சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையில் ஏறுதழுவதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 

காணும் பொங்கல் :

மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கா பல வாரங்கள் உழைத்து தயாரான மக்கள் தங்கள் உறவினர்களை கண்டு மகிழ்ச்சியுடன் குதூகலிக்கும் நாளாக காணும் பொங்கல் உள்ளது. இந்த நாளிலும் கிராமங்களில் விளையாட்டுப்போட்டிகள், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். 

click me!