
தொடரும் ஆன்லைன் கல்யாண மோசடி... அமெரிக்க டாக்டரென ஆசை காட்டி ரூ.11 லட்சம் கறந்த கூடுவாஞ்சேரி பார்ட்டி..!
போலி டாக்டர், போலி போலீஸ் அதிகாரி வரிசையில் போலி அமெரிக்க மாப்பிள்ளையும் சென்னை மாநகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திருமணம் செய்வதாக விதவை பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி, 11 புள்ளி 50 லட்சம் மோசடி செய்த நிலையில் சிக்கியிருக்கிறார், போலி அமெரிக்க டாக்டர் மாப்பிள்ளை
சென்னை புறநகர் பகுதியைச் சேர்ந்த விதவை பெண் ஒருவர்,மகனுடன் வசித்து வருகிறார். இளம் வயது என்பதால், தமக்கான வாழ்க்கை துணையை தேடிய அவர், தனது விவரங்களை, மேட்ரிமோனியல் இணையதளம் ஒன்றில் பதிவேற்றினார்.
இது நடந்த சில நாட்களில், அமெரிக்காவிலிருந்து, அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசிய நபர், தனது பெயர் டாக்டர் பிரசாந்த் பிரதாப் சிங் என்றும், தான் ஒரு எலும்பு மருத்துவ நிபுணர் என்றும் அறிமுகம் ஆகியிருக்கிறார்.
இந்த உரையாடல்கள் தொடர்ந்த நிலையில், திடீரென ஒருநாள், திருமணம் குறித்து பேச வேண்டும் என்றும், எனவே, Fiancie Visa-வில் வந்து அமெரிக்காவில் தன்னை சந்திக்குமாறு கூறியிருக்கிறார். இந்த விசாவை எடுத்துத்தருவதாக கூறி, சிறுசிறுக அந்த இளம் விதவை பெண்ணிடம் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை பெற்றிருக்கிறார்.
ஆனால், நாட்கள் உருண்டோடிய நிலையில், Fiancie Visa வந்து சேரவில்லை. அந்த நபரை, இளம்பெண் தொடர்பு கொள்ள முயன்ற நிலையில் அதுவும் கானல் நீராகவே முடிந்திருக்கிறது.. இதையடுத்து, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அந்த பெண் புகார் அளிக்க, களமிறங்கிய சைபர் கிரைம் போலீசார், அந்த நபரை தேடியபோது, எளிதில் துப்பு துலக்க முடியவில்லை.
அமெரிக்க டாக்டர் எனக்கூறி அந்த பெண்ணிடம் அறிமுகமாகிய அந்த நபர், முழுக்க, முழுக்க இண்டர்நெட் கால்களை பயன்படுத்தியே பேசி வந்திருக்கிறான். இதனால், முதலில் சிரமத்தை சந்தித்த சைபர் கிரைம் போலீசார், பின்னர், அவனது சமூக வலைதள நடமாட்டத்தை கண்காணித்து, அவனது இருப்பிடத்தை கண்டறிந்தபோது அதிர்ந்து போயுள்ளனர்.
அமெரிக்க டாக்டர் எனக்கூறிய அந்த நபர், இறுதியில், இருந்ததோ, சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில்…அவனது கூடுவாஞ்சேரி ஜெய்பீம்நகர் வீட்டில் வைத்தே போலீசார் மடக்கியுள்ளனர். அவனிடம் விசாரித்ததில், அந்த மோசடி பேர்வழியின் பெயர், குமார்துரை என்பதும், ராஜன்துரை, கெளதம் ஜார்ஜ்குமார் உள்ளிட்ட பெயர்களில் பல பெண்களிடம் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
தலையில் விக் வைத்து, அரிதாரங்கள் பூசி, போலி அமெரிக்கா டாக்டர் மாப்பிள்ளையாக நடித்து இளம் விதவை பெண்ணிடம் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை சுருட்டிய அந்த நபரை கைது செய்த போலீசார், ஆலந்தூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருமண தகவல் இணையதளம் மூலமாக வரம் தேடுவோர், குறிப்பிட்ட மணமகனையோ, மணமகளையோ நேரில் சந்தித்து, அதன் பின் தீர விசாரித்த பிறகே, திருமண ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இது போன்ற பல நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. முகம் தெரியாத நபரோ அல்லது அவசரத்திற்கு யாரவது பணம் கேட்டால்,தயங்காமல் காவல் நிலையத்தை அணுகி பின்னர் பணம் கொடுப்பது நல்லது....
ஆன்லைன் மோசடி அதிகளவில் நடைபெற்று வருவதால் ,ஒரு முறைக்கு பலமுறை யோசனை செய்து திறம்பட செயல்படுவதே நல்லது ...
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.