இந்திய அரசியல்வாதிகளில் இதுவரை யாரும் செய்யாத சாதனைகளுக்கு சொந்தக்காரரான கலைஞர் பிறந்தநாள் இன்று!!

By Ma riyaFirst Published Jun 3, 2023, 10:03 AM IST
Highlights

Kalaignar 100th Birthday: கலைஞர்  கருணாநிதியின்  100ஆவது பிறந்தநாள் இன்று (ஜூன்.3) தமிழகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. அவருடைய வாழ்க்கை பயணத்தில் இருந்து சில தகவல்கள் உள்ளே..! 

ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த விஷயங்களை இலவச திட்டங்களாக அறிமுகப்படுத்தி அவர்களின் நிலையை உயர்த்திய பெருமை கலைஞர் கருணாநிதியை தான் சேரும். அவரது புகழ் தமிழ்நாட்டு மக்களின் மனதில் என்றும் இருக்கும். திராவிட அரசியலில் மைல்கல்லாக இருந்த முத்துவேல் கருணாநிதி, 50 ஆண்டுகள் மக்களுக்காக உழைத்தார். தன்னுடைய 14 வயதில் போராட்ட களம் கண்டவர். கலைஞர்  கருணாநிதியின்  100ஆவது பிறந்தநாள் இன்று (ஜூன்.3) தமிழகம் முழுக்க தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது.

யார் இந்த முத்துவேல் கருணாநிதி: 

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை என்னும் ஊரில் ஜூன் மாதம் 1924 ஆம் ஆண்டில் பிறந்தார் கருணாநிதி. இவரது பெற்றோர் அஞ்சுகம் அம்மையார், முத்துவேல் அய்யா ஆவர். இவர்களுக்கு கருணாநிதி மூன்றாவது மகன். இவருக்கு பெரியநாயகம், சண்முகசுந்தரம் என்று மூத்த உடன்பிறப்புகள் இருந்தனர். 

அரசியல் பயணம்: 

கருணாநிதி தனது 14 வது வயதிலேயே இயக்கங்களில் தன்னை இணைத்து கொண்டு அரசியல் பயணத்தை தொடங்கினார். திருவாரூர் மாவட்டத்தில் நடந்த சுயமரியாதை கூட்டமொன்றில் பட்டுக்கோட்டை அழகிரி பேசிய விஷயங்களில் ஈர்க்கப்பட்டு தானும் திராவிட இயக்கத்திற்குள் இணைந்து கொண்டார். பட்டுக்கோட்டை அழகிரி மீது தான் கொண்ட அன்பின் அடையாளமாக தன்னுடைய மகனுக்கு அழகிரி எனவும் பெயர் சூட்டினார். 

மாணவர் அணி செயலாளராக தொடங்கி பத்திரிக்கையாளராகவும் விளங்கிய அழகிரியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு கொண்ட கருணாநிதி, தானும் கையெழுத்து பிரதி தொடங்கும் அளவுக்கு தன்னை வளர்த்து கொண்டார். திருவாரூர் தோழர்களுடன் இணைந்து மாத இதழாக ”மாணவ நேசன்” என்ற பெயரில் கையெழுத்து பிரதி பத்திரிக்கையை 1941ஆம் ஆண்டு நடத்த தொடங்கினார். அடித்தட்டு மக்களின் வாழ்வியலை தன்னுடைய பத்திரிகையில் எழுதுவதை கருணாநிதி வழக்கமாக வைத்திருந்தார். இந்த துண்டு பிரசுரம் தான் பின் நாட்களில் முரசொலி எனும் தினசரியாக உருவெடுத்தது.

கலகக்காரர் கலைஞர்:  

1957ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிகாரர்கள் மத்திய மாநில ஆட்சியை கையில் வைத்திருந்த காலம். அப்போது இந்தி மொழித் திணிப்பு என்பது தமிழகத்திற்கு பெரிய சவால். 1957இல் அக்டோபர் மாதம் 13ம் தேதி கருணாநிதி தலைமையேற்க இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. கல்லக்குடியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தன் தலையை வைத்து நடத்தி தைரிய போராட்டம்தான் பின்னாளில் கட்சியில் இவருக்கென தனி இடத்தினை பெற்று கொடுத்தது. சிறைக்கு சென்ற அனுபவமும் கருணாநிதிக்கு உண்டு. 1963ஆம் ஆண்டு மறைந்த அண்ணா துரையுடன் இந்தி எதிர்ப்பு மாநாட்டினை சென்னையில் நடத்திய காரணத்தில் இருவருமே சிறை சென்றார்கள். 

சட்டப்பேரவை உறுப்பினராக கலைஞர் 

1957ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் குளித்தலை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நின்றார். அதில் வெற்றியும் பெற்றார். அப்போது அவரிம் வயது 33. உங்களால் நம்ப முடிகிறதா? தமிழ்நாட்டில் 12 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். இந்திய அரசியல்வாதிகளில் இதுவரை யாரும் செய்யாத சாதனையாக இது கருதப்படுகிறது. இடையில் 1984ஆம் ஆண்டு மட்டும் அவர் தேர்தலில் நிற்கவில்லையாம்.  

முதல்வராக கருணாநிதி: 

தமிழ்நாட்டில் ஐந்து தடவை கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக பதவியில் இருந்துள்ளார். தனது 45 வது வயதில் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றார். 

நாடகம், திரைப்பட துறை பங்களிப்பு: 

கலைஞரின் முதல் நாடகமான பழனியப்பன், திருவாரூரில் உள்ள பேபி டாக்கீஸில் 1944 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. கலைஞர் என்ற பட்டம் கூட நாடக கலை மூலமாக தான் வந்து சேர்ந்தது. கருணாநிதியின் தூக்கு மேடை என்ற நாடகத்தின் போது எம்.ஆர். ராதா தான் கலைஞர் என்ற பட்டத்தை அளித்தார். 

1947ஆம் ஆண்டு ராஜகுமாரி என்ற படத்திற்கு முதன்முறையாக பணியாற்றினார் கலைஞர் கருணாநிதி. இவருடைய வசனத்தில் இறுதியாக வெளிவந்த திரைப்ப்டம் பொன்னர் சங்கர் (2011). தனது வாழ்நாளில் 21 நாடகங்கள், 69 திரைப்படங்களில் தன் உழைப்பை கொடுத்துள்ளார் கலைஞர். எம்.ஜி. ஆருடன் சுமார் 9 படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

இலக்கியப் பணி: 

அரசியல்வாதி, சினிமா துறை உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கினார். ஆனால் இலக்கிய பணிக்கும் தன்னால் இயன்ற வரை அத்தனை சிறப்பாக பங்காற்றினார். அவரின் சிந்தனையின் ஊற்றில் இருந்து எழுதப்பட்ட சுமார் 150ற்கும் மேற்பட்ட நூல்கள் நமக்கு கிடைத்துள்ளன. சமூகம் சார்ந்த 10 நாவல்கள், 6 சரித்திர நாவல்களும் அதில் உண்டு. இலக்கிய, இலக்கண செறிவு கொண்டிருந்ததால் கலைஞருக்கு வார்த்கை ஜாலங்ககும் வசப்பட்டன. உடன்பிறப்பே என்ற பெயரில் முரசொலியில் 1971இல் இருந்து எழுதிய தொடரினை தன் உடல் நிலை மோசமாக மாறும் வரை (2016) எழுதியவர் கருணாநிதி. எல்லாம் கடிதம் மாதிரியான உரையாடல்களாக எழுதப்பட்டவை. இவற்றின் எண்ணிக்கை சுமார் 7 ஆயிரம் ஆகும். 

திருமண வாழ்க்கை: 

கலைஞரின் முதல் திருமண வாழ்க்கை நன்றாக தான் சென்றது. அவர் 1944ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பத்மாவதி என்பவரை சுயமரியாதை திருமணம் செய்தார். ஆனால் அவரது முதல் திருமணம் வெகுகாலம் நிலைக்கவில்லை. 1948ஆம் ஆண்டு பத்மாவதி இயற்கை எய்தினார். அதே ஆண்டில் தயாளு அம்மாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் நடக்கும் கொஞ்ச நேரம் முன்பு கூட இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டாராம். இதற்கு பிறகு 1966ஆம் ஆண்டில் ராசாத்தி அம்மாவை மணமுடித்தார். 

கருணாநிதியின் குழந்தைகள் விவரம்:  

கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதி. இத்தம்பதியின் மகன் தான் மு.க.முத்து. கருணாநிதிக்கும் தயாளு அம்மாளுக்கும் பிறந்த குழந்தைகள் மு.க.தமிழரசு, செல்வி, மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின். கருணாநிதியின் மூன்றாம் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் மகள் தான் கனிமொழி. 

 

click me!