'வாழ்க்கையில நான் விரும்பியது எதுவுமே கிடைக்கவில்லை...' ஏமாற்றத்தில் ஒரு வாரம் பட்டினி கிடந்த இஸ்ரோ சிவன்..!

By Thiraviaraj RMFirst Published Sep 10, 2019, 5:28 PM IST
Highlights

என் அப்பாவின் மனதை மாற்ற ஒரு வாரம் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன். ஆனால், கடைசியில் என் மனதைத்தான் மாற்றிக் கொண்டேன். 

இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் சிவன் தனது மாணவ வாழ்க்கையின் பெரும்பகுதி ஒரு ஜோடி கால்சட்டை கூட வைத்திருக்கவில்லை. பேண்ட் போட பணமில்லாமல் வேட்டியை அணிந்தே கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் வாழ்வில் இருந்த வறுமை ஏதும் அவர் இலக்குகளை அடைவதைத் தடுக்க முடியவில்லை.

இது குறித்து அவர், ‘’வாழ்வில் எனக்கு கிடைக்காததைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எங்கள் கிராமத்தில் நாங்கள் விவசாய பண்ணைகளில் வேலை செய்துள்ளோம். என் தந்தை ஒரு விவசாயி. கோடைக் காலத்தில் மாந்தோப்பில் உதவிக்குச் செல்வோம். என் தந்தை வேலைக்கு தொழிலாளர்களை வைத்துக் கொள்ள மாட்டார். கூலி கொடுக்க வேண்டும் என்பதால் நானே தோட்ட வேலைகலை செய்து வந்தேன். 

வழக்கமாக ஒவ்வொருவரும் கல்லூரிகளை தேர்ந்தெடுக்க வெவ்வேறு விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் எனது அப்பா என் வீட்டிற்கு அருகில் இருக்கிற கல்லூரியை தேர்ந்தெடுந்தார். அப்போதுதான் அவருக்கு உதவ முடியும். எங்களின் வீட்டு வருமானம் கைக்கும் வாய்க்கும் சரியாக இருந்தது.

“நான் மெட்ராஸ் இண்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் படிக்கத் தொடங்கியபோதுதான் செருப்பையே அணிய ஆரம்பித்தேன். அதுவரை வெறுங்காலுடன் தான் நடந்து கொண்டிருந்தேன். எங்களிடம் கால்சட்டை கூட இல்லை. நாங்கள் எப்போதும் வேஸ்டி மட்டுமே அணிந்திருந்தோம்.

எனது ஆரம்ப வாழ்க்கையில் பல கஷ்டங்களை எதிர்கொண்டாலும் 3 வேளை உணவை வழங்கிய பெற்றோருக்கு நன்றி  சொல்லியே ஆக வேண்டும். எங்கள் வாழ்க்கை அவ்வளவு மோசமாக இல்லை. எங்கள் பெற்றோர் ஒரு நாளைக்கு மூன்று வேளை வயிறார உணவு வழங்க முடிந்தது. எனது தந்தையால் எனது பொறியியல் படிப்புக்கு நிதியளிக்க முடியாததால் இளங்கலை அறிவியல் படிப்பைத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் பொறியியல் படிக்க விரும்பினேன். ஆனால் என் தந்தையால் செலவிட முடியாததால் இளங்கலை அறிவியல் படித்தேன்.

என் அப்பாவின் மனதை மாற்ற ஒரு வாரம் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன். ஆனால், கடைசியில் என் மனதைத்தான் மாற்றிக் கொண்டேன். இளங்கலை கணிதம் படித்தேன். அதன் பிறகு எனது தந்தை நிலத்தை விற்று பொறியியல் படிப்பு பணம் கொடுத்தார்.  அதன்பிறகு பிடெக் படித்தேன்.

 

பின் வேலையில்லாமல் கஷ்டப்பட்டேன். ஏனென்றால் அந்த சமயத்தில் ஏரோநாட்டிக்கல் படிப்புக்கான வேலை மிகவும் குறைவாகவே இருந்தது. இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட், நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றில் மட்டுமே நோக்கம் இருந்தது. அதன் பின் ஐ.ஐ.எஸ்.சியில் மேல் படிப்புக்கு சென்றேன்.

நான் எனது முழுவாழ்க்கையிலும் விரும்பியது கிடைக்கவே இல்லை. ஆனால் கிடைத்த வாய்ப்பினை சிறப்பாக செய்தேன். நான் செயற்கைக்கோள் மையத்தில் சேர விரும்பினேன். ஆனால், எனக்கு விக்ரம் சாரபாய் மையம் கிடைத்தது. அங்கேயும் நான் ஏரோடைனமிக்ஸ் குழுவில் சேர விரும்பினேன். ஆனால் நான் பி.எஸ்.எல்.வி திட்டத்தில் சேர முடிந்தது. எல்லா இடங்களிலும் நான் விரும்பியது ஏதும் கிடைக்கவில்லை’’ என அவர் தெரிவித்தார் .

click me!