IPL
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் 20 ஓவரில் 161 ரன்களை அடித்து, 162 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி.
டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் களத்திற்கு வந்த ரஹானேவும் வெறும் 2 ரன்னில் நடையை கட்ட, மறுமுனையில், இதற்கு முந்தைய போட்டிகளை போல அல்லாமல் அடித்து ஆடிய தவானுடன், ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார்.
தவானும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். 180 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த தவான், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல், 57 ரன்களுக்கு கார்த்திக் தியாகியின் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயரும் 53 ரன்களுக்கு ஆட்டமிழக்க, செட்டில் பேட்ஸ்மேன்கள் இருவரும் ஆட்டமிழந்ததால், டெல்லி கேபிடள்ஸ் எதிர்பார்த்த ஸ்கோரை விட வெகுவாக குறைந்தது.
டெல்லி கேபிடள்ஸின் ஃபினிஷர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 18 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழக்க, அலெக்ஸ் கேரியும் 14 ரன்கள் மட்டுமே அடித்தார். இதையடுத்து டெத் ஓவர்களில் பெரிதாக ஸ்கோர் செய்யமுடியாத டெல்லி கேபிடள்ஸ் அணி, 20 ஓவரில் 161 ரன்கள் மட்டுமே அடித்தது.
பிரித்வி ஷா, தவான், ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஸ்டோய்னிஸ், கேரி என இளமையும் அனுபவமும் கலந்த வலுவான பேட்டிங் ஆர்டரை பெரிய ஸ்கோர் அடிக்கவிடாமல் 161 ரன்களுக்கே சுருட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 162 ரன்கள் என்ற இலக்கு என்பது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் எளிதாக அடிக்கக்கூடிய இலக்கே என்பதால் ராஜஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகவுள்ளது.