Governor Vs CM: ஆதிக்கம் செலுத்தும் ஆளுநர்கள்: எதிர்க்கும் 3 தென் மாநில முதல்வர்கள்

By Pothy RajFirst Published Nov 8, 2022, 4:25 PM IST
Highlights

தமிழகம், தெலங்கானா மற்றும் கேரளா மாநிலங்களில் ஆளும் அரசுகளுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. 

தமிழகம், தெலங்கானா மற்றும் கேரளா மாநிலங்களில் ஆளும் அரசுகளுக்கும், ஆளுநர்களுக்கும்(Governor Vs CM)  இடையே நடக்கும் மோதல் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. 

ஆளுநர்கள் VS முதல்வர்கள்

கேரள மாநிலத்தில் ஆளும் எல்டிஎப் கூட்டணி, ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக வீட்டுக்குவீட்டு பிரச்சாரம் செய்யும் பணியையும், துண்டுப் பிரசுரங்கள் மூலம் ஆளுநர் குறி்த்த விமர்சனத்தை வைத்து மக்கள் ஆதரவை திரட்டி வருகிறது.

தமிழகத்தில் ஆளுநர் என் ரவிக்கு எதிராகவும், அவரை நீக்கிவிட்டு புதிய ஆளுநரை நியமிக்கும் வகையில் அனைத்து எம்.பி.க்கள் ஆதரவையும் ஆளும் திமுக அரசு தொடங்கியுள்ளது. 

தெலங்கானாவில் பாஜகவை கடுமையாக எதிர்த்துவரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியும், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக மோதலில் ஈடுபட்டு வருகிறது. நிர்வாக ரீதியாக தலையிடுதல், மசோதாக்களை நிறுத்தி வைத்தலில் ஈடுபடும் ஆளுநருக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை தெலங்கானா ஆளும் அரசு முன்வைத்து வருகிறது.

வெறுப்பு

ஆளுநர்கள் என்பவர்கள் மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறார்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை செயல்படவிடாமல் முடக்குகிறார்கள் என்று தென் மாநிலங்களில் ஆளும் பாஜக அல்லாத அரசுகளான திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், டிஆர்எஸ் கட்சி அரசுகள் விமர்சிக்கின்றன.உச்ச கட்டமாக அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநருக்கான பதவியையும் கேள்வி கேட்கும் அளவுக்கு தென் மாநிலங்களில் உள்ள பாஜகஅல்லாத ஆளும் அரசுகளை ஆளுநர்கள் வெறுப்பேற்றி வருகிறார்கள். 

மோதல்கள்

கேரளா, தமிழகம், தெலங்கானாவில் உள்ள ஆளுநர்களுக்கும், ஆளும் பாஜக அல்லாத அரசுகளுக்கும் முதல்வர்களுக்கும் இடையே வார்த்தை மோதல் வலுத்து வருகிறது. ஆளுநருக்கு எதிராகப் போராட்டங்கள், கூர்மையான விமர்சன வார்த்தைகள், தர்ணாக்கள் நடத்தப்படுகின்றன.

மூக்கை நுழைக்காதிங்க

தெலங்கானாவில் ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக திமுகவின் நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளது. “ திமுக தலைவர் குடும்பத்தின் ஆனிவேர் தெலுங்குகுடும்பத்தைச் சேர்ந்தது” என்ற தமிழிசையின் பேச்சுக்கு திமுக கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. 

"தெலங்கானா ஆளுநர் தமிழகத்தில் அரசியல் செய்யக்கூடாது. இது அவரின் பணிஅல்ல. ஆளுநர் பணியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக அரசியலி்ல் ஈடுபட வேண்டும். இதில் தமிழக ஆளுநராக இருக்கும் என்.ரவி பலநேரங்களில் ஆளுநருக்கு இருக்கும் வரம்புகளை மீறி பேசி, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார், தமிழிசை அரசியல் மற்றும் சட்ட அளவுகளுக்குள் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்” என்று முரசொலி நாளேடு பதிலடி கொடுத்துள்ளது

கையெழுத்து ஆதரவு

இதற்கிடையே ஆளுநர் ஆர் என் ரவியை இடமாற்றம் செய்யக் கோரி திமுக தங்களோடு ஒத்துழைத்துச் செல்லும் எம்.பி.க்கள் ஆதரவைக் கோரியது. ஆளுநர் பதவிக்கே தகுதியற்றவராக ரவி இருக்கிறார் எனக் கூறி கையெழுத்துப் பிரச்சாரத்தை எம்.பி.க்களிடையே திமுக நடத்தியது. 

தமிழக அரசு அனுப்பிய 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்என் ரவி காலம்தாழ்த்தி வருகிறார். நீட் விலக்கு மசோதாவை இருமுறை சட்டப்பேரவையில் நிறைவேற்றியும் ஏன் கையொப்பமிடவில்லை எனக் கூறி ஆளுநருக்கு எதிராக திமுக கட்சித் தலைவர்கள் போராட்டமும் நடத்திவிட்டனர். 

இமாச்சல் தேர்தலுக்கு முன்பாக கூட்டமாக பாஜகவில் சேர்ந்த 26 காங்கிரஸ் நிர்வாகிகள்

டிஆர்எஸ் தமிழிசை மோதல்

தெலங்கானாவிலும் ஆளும் டிஆர்எஸ் அரசுக்கு எதிராக ஆளுநர் தமிழிசை குடைச்சல் கொடுத்து வருகிறார். மாநில கல்வித்துறை அமைச்சர் இந்திரா ரெட்டியை அழைத்து, 15 பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி விதிப்படி ஆட்களை நியமிப்பது குறித்து ஆலோசித்தார். கடந்த 3 ஆண்டுகளாகஏன் காலியிடங்களை நிரப்பவில்லை என்றும் தமிழிசை கேள்வி எழுப்பி டிஆர்எஸ் கட்சியுடன் மோதினார்.

மருத்துவப் பல்கலைக்கழகம் தவிர அனைத்திலும் ஆசிரியர்களை நேரடியாக நியமிக்கும் மசோதா உள்ளிட்ட 8 மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை ஒப்புதல் தராமல் டிஆர்எஸ் அரசை வெறுப்பேற்றி வருகிறார். இதனால் நாளுக்கு நாள் ஆளுநருக்கும், ஆளும் டிஆர்எஸ் அரசுக்கும் இடையே வார்த்தை மோதல் வலுத்து வருகிறது.

பேசவாய்ப்பில்லை

குடியரசுத் தினவிழாவிலும், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் ஆளுநர் தமிழிசையை பேசுவதற்கு முதல்வர் சந்திரசேகர் ராவ் அனுமதிக்கவில்லை. இதிலிருந்து ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையிலான மோதல் முற்றத் தொடங்கியது. ஆளுநர் கோட்டாவில், டிஆர்எஸ் தலைவர் கவுசிக் ரெட்டியை எம்எல்சி உறுப்பினராக நியமிக்க மாநிலஅரசு பரிந்துரைக்கு கையொப்பமிட தமிழிசை மறுத்துவிட்டார். இதனால் தெலங்கானாவிலும், ஆளுநர், முதல்வர் மோதல் வலுத்து வருகிறது

பணமதிப்பிழப்பு! இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு: நோக்கம் நிறைவேறியதா? உண்மை வெளிவருமா?

உச்ச கட்ட மோதல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயகக் கூட்டணி ஆளும் கேரள மாநிலத்தில், ஆளுநர், முதல்வர் மோதல் உச்சக் கட்டத்தை நோக்கி நகர்கிறது. இரு தரப்பினரும் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொள்வதைத் தவிர அனைத்தும் நடந்துவிட்டது. 

கேரளாவில் பல்கைலக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆரிப் கான் தனது பேட்டியின்போது இரு சேனல்களை மட்டும் வெளியேறக் கூறியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பத்திரிகையாளர்கள் சங்கமும் ஆளுநர் மாளிகை நோக்கி போராட்டம் நடத்தியது.

"தாக்குங்கள், என் அலுவலகத்துக்கு துணிச்சல் இருந்தால் வாருங்கள்" என்று ஆளுநர் ஆரிப் முகமதுகானும் சவால் விட்டார். இதற்கிடையே நவம்பர் 15ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன? எங்கு வாங்குவது? யார் வெளியிடுவார்கள்? இது கறுப்புப் பணமா?

ஆளுநரை நீக்குங்கள்!

கேரள அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பல மசோதாக்களுக்கு இன்னும் ஆளுநர் ஆரிப் கான் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் பலமுறை அவசரச்சட்டம் காலாவதியாகியுள்ளதாக அரசு சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. ஆளுநர் பதவியையே நீக்கிவிடுங்கள் என்று மார்க்கிச்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறும் அளவுக்கு ஆளுநர் மோதல் அதிகரித்துள்ளது.

ஆளுநர் தேவையில்லை என நினைக்கும் கட்சிகளுடன் சேர்ந்து டெல்லியில் ஆலோசனை நடத்தவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது. 

மாநில அமைச்சரவை நிறைவேற்ற பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.

எல்டிஎப் பிரச்சாரம்

உச்ச கட்டமாக ஆளுநர் குறித்த செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக வீட்டுக்கு, வீடு ஆளுநர் குறித்த பிரச்சாரத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎப் கட்சி முன்னெடுத்துள்ளது. இதற்காக துண்டுப் பிரசுரங்கள் மூலம் பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் தொடங்கியுள்ளது.

ஆளுநர் யார்

கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே கடந்த 1983ம்ஆண்டு  ஆளுநரின் பணி, பங்கு என்ன என்பது குறித்து ஓர் அறிக்கை அளித்திருந்தார். அதில், ஆளுநர் என்பவர் அரசியலமைப்பின் ஆதார தத்துவத்தை மீறியுள்ளார்கள், ஆட்சிக் கலைப்பு, முதல்வர் நியமனம் ஆகியவற்றில் நாடாளுமன்ற மரபுகளை கடைபிடிக்கவில்லை. மத்தியில் ஆளும் அரசுக்கு ஏற்பவே செயல்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்திருந்தார்

பாஜகவின் அகங்காரம்! மோர்பி பாலம் விபத்துக்கு இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை: ப.சிதம்பரம் விளாசல்

தேவையில்லை!

மே.வங்கத்தின் முன்னாள் முதல்வர் ஜோதி பாசு, ஆளுநர் பதவியே தேவையில்லை என்று  தெரிவித்தார். அது சாத்தியமில்லை என்றால், மாநிலசட்டப்பேரவையின் அனுமதியுடன் ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். தமிழகத்தில் முன்னாள் முதல்வர்களாகன  அண்ணா, எம்ஜிஆர், ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்டிஆர் ஆகியோர் ஆளுநர்கள் பதவி தேவையற்று என்ற கருத்தோடு இருந்தனர்.

வாய்ப்பே கிடையாது

ஆனாலும், அசாதார சூழல் என வரும்போது ஆளுநர் பதவி அவசியமானது. அதுமட்டுமல்லாமல் மத்தியில் ஆளும் அரசுக்கு எதிரான அரசுகள் மாநிலத்தில் ஆளும்போது அந்த அரசுக்கு குடைச்சல் கொடுக்க ஒருநபர் தேவைதான். ஆதலால் எந்த கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் ஆளுநர் பதவி எப்போதும் வலுவானதாகவே இருக்கும்
 

click me!