
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் பிட்டோ. இவருக்கு மனைவி பிரபிதா மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிரபிதா கர்ப்பமாகியுள்ளார். பிரசவத்துக்காக திருச்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபிதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்-ஆன பிரபிதா, கணவர் பிட்டோவுடன் வீட்டுக்குச் செல்லாமல் நேராக எடப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஃபாரேன் தேவாலயத்துக்கு வந்துள்ளனர். இரவு 8.15 மணியளவில் தேவாலயத்தில் தாங்கள் பெற்றெடுத்த குழந்தையை வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
சிறிது நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு, தேவாலயத்தின் காவலர் ஓடி வந்துள்ளார். பச்சிளம் குழந்தையைக் கண்ட அவர், திகைத்துப்போனார். இது குறித்து அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் தேவாலயத்துக்கு வந்த போலீசார், குழந்தையை மீட்டனர். மேலும் தேவாலயத்தில் குழந்தையை விட்டுச் சென்றது யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமராவையும் போலீசார் ஆராய்ந்தனர். அப்போது, ஆண்-பெண் இருவர் குழந்தையை தேவாலயத்தில வைத்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு, கவனமாக வாசல்படியில் வைக்கும் காட்சியும் பதிவாகி இருந்தது.
சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த பிட்டோ - பிரபிதாவை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தையை விட்டுச் சென்றதற்கான பிட்டோ கூறிய காரணத்தை கேட்டவர்கள் அதிர்ந்தனர். பிட்டோ கூறும்போது, எங்களுக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், மீண்டும் எனது மனைவி கர்ப்பமானாள். நான்காவது குழந்தைக்கு தாயாகும் என் மனைவியையும், என்னையும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏளனமாகப் பார்த்து கேலி செய்வார்கள். அவர்களின் விமர்சன வலையத்துக்குள் சிக்கிக் கொள்வோம் என அஞ்சினோம். அதனாலேயே, குழந்தையைத் தேவாலயத்தில் விட்டுச் சென்று விடலாம் எனத் தீர்மானித்தோம் என கூறினார்.
இதையடுத்து, பிட்டோ மற்றும் பிரபிதா மீது ஐபிசி 317 பிரிவின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மீட்கப்பட்ட குழந்தை தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.