தானே: மகாராஷ்டிரா மாநிலத்தில் டிசி வாங்கச் சென்ற பள்ளி மாணவியை ஆசிரியர் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
அங்குள்ள தானே மாவட்டத்தின் உலாஸ்நகரில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு செயல்படும் தனியார் பள்ளி ஒன்றில் விஜய் தங்கார் என்ற ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் பயின்ற 12 வயது மாணவி ஒருவர், பள்ளியில் இருந்து வெளியேறுவதற்காக, விடுவிப்பு சான்றிதழ் (டிசி) வாங்க வந்துள்ளார்.
அப்போது, அந்த மாணவியை தனது அலுவலக அறைக்கு, விஜய் தங்கார் அழைத்துச் சென்றுள்ளார். அங்கே மாணவியை திடீரென அவர் பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்துள்ளார். அப்போது மாணவி சத்தம் போட்டதால், அருகில் இருந்த பலர் ஓடிசென்று அவரை காப்பாற்றினர். மேலும், ஆசிரியர் விஜய் தங்காரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதன்பேரில், போலீசார் போக்ஸோ (சிறார் பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, விஜய் தங்காரை கைது செய்தனர்.
டிசி வாங்க வந்த மாணவியை ஆசிரியரே பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதால், சமீபத்தில் 12 வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்கும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.
ஆனாலும், அச்சம் ஏதுமின்றி ஆசிரியர்கள், சாமியார்கள் மற்றும் பல அதிகாரிகள் தொடர்ந்து, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு கைதாவது தொடர்கதையாக உள்ளது. இதை தடுக்க மேலும் கடுமையான சட்டங்கள் தேவை என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது