நீங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு..! ஐஏஎஸ் அதிகாரிகளை ஊக்கப்படுத்திய சத்குரு

By Asianet TamilFirst Published Jun 4, 2020, 2:53 PM IST
Highlights

’ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு’ என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு புகழாரம் சூட்டியுள்ளார்.
 

கொரோனா பாதிப்பு மிகுந்த இந்த சவாலான காலத்தில் கல்வியாளர்கள், மருத்துவர்கள், வர்த்தக தலைவர்கள், பாதுகாப்பு படையினர் என பல்வேறு தரப்பினருடன். ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, ஆன்லைனில் கலந்துரையாடி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் சத்குரு கலந்துரையாடினார். இதில் லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியின் (Lal Bahadur Shastri National Academy of Administration) இயக்குநர் டாக்டர். சஞ்சீவ் சோப்ரா, தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத் துறை முதன்மை செயலாளர் திரு.ராஜேஷ் லக்கானி, இந்திய சிவில் மற்றும் நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரும், தேசிய சாலை போக்குவரத்து துறையின் இணை செயலாளருமான திரு.அமித் குமார் கோஷ், பஞ்சாப் மாநில ஆளுநரின் முதன்மை செயலாளர் ரு.ஜே.எம்.பாலமுருகன், இஸ்ரோவின் யூ.ஆர்.ராவ் சேட்டிலைட் மையத்தின் கண்ட்ரோலர் திருமதி.விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிர்வாக ரீதியாக முடிவெடுப்பதில் உள்ள இடர்பாடுகள், மனிதாபிமன அடிப்படையில் சட்டத்தை நிலைநிறுத்தும் வழிமுறைகள், தெளிவற்ற சட்டங்களை கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவர்கள் சத்குரு உடன் கலந்துரையாடினர்.

இந்த கலந்துரையாடலில் சத்குரு பேசியதாவது:

மனித உடலில் இதயம், மூளை என பல்வேறு உறுப்புகள் இருந்தாலும், அதில் முதுகெலும்பு தான் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு எனலாம். நேரான முதுகெலும்பால் தான் நமது மனித உடல் அமைப்பே உருவாகி இருக்கிறது.

அதேபோல், அரசாங்கம் இயங்குவதற்கு பலர் பங்களிப்பு அளித்தாலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தான் நாட்டின் முதுகெலும்பை போல் செயல்படுவதாக கருதுகிறேன். நாடு சிறப்பாக செயல்பட அந்நாட்டின் முதுகெலும்பு நேராகவும், வலுவாகவும் இருக்க வேண்டும். 

குறுகிய கால மற்றும் நிலையற்ற பதவி காலத்தை உடைய அரசியல்வாதிகளைக் காட்டிலும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், வர்த்தக மற்றும் சமூகத் தலைவர்கள் தேசத்தில் அதிக தாக்கத்துடன் கூடிய மாற்றங்களை உருவாக்கும் திறன் படைத்தவர்கள். உங்களின் அமைதி புரட்சி’ தேசத்தின் பாதையை தீர்மானிக்கவல்லது.

சுமார் 25 முதல் 30 ஆண்டுகள் அரசு நிர்வாகத்தில் பணியாற்றும் உங்களால் மக்கள் நலனில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியும். நாம் இப்போது சவாலான, முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறோம். வரும் 5 ஆண்டுகளில் நாம் செய்யும் செயல்கள் தான் அடுத்த 100 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதைத் தீர்மானிக்கும்.

நீங்கள் நம் தேசத்தின் இளைஞர்களுடன் தொடர்ந்து உரையாடல் நிகழ்த்தி அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். குறிப்பாக, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உங்களுடைய இளம் தலைமுறை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஈர்க்கும் விதமாக சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்று சத்குரு கூறினார்.
 

click me!