ஓடும் ரயிலில் 4 பேரை சுட்டுக் கொன்ற காவலர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்: மனைவி தகவல்!

By Manikanda PrabuFirst Published Dec 10, 2023, 1:52 PM IST
Highlights

ஓடும் ரயிலில் 4 பேரை  சுட்டுக் கொன்ற சேத்தன் சின்ஹ் சவுத்ரி மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்

ஜெய்ப்பூர் - மும்பை விரைவு ரயிலில், ரயில்வே பாதுகாப்பு காவலர் சேத்தன் சின்ஹ் சவுத்ரி கடந்த ஜூலை மாதம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளர் டிக்கா ராம் மீனா மற்றும் பயணிகள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சேத்தன் சின்ஹ் சவுத்ரி கைது செய்யப்பட்டுள்ளார்.

ரயில்வே பாதுகாப்பு காவலருக்கும், ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், உயிரிழந்த மற்ற 3 பேரும் முஸ்லிம்கள். அவர்களது மதம் சார்ந்து இழிவாக பேசி அவர்கள் மூவரையும் சேத்தன் குமார் சவுத்ரி சுட்டதாக வீடியோ ஒன்றும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பன போன்ற தகவல்களும் வெளியாகின. ஆனால், சேத்தன் சின்ஹ் சவுத்ரியின் மனநிலை நன்றாக இருந்துள்ளது எனவும், சம்பவத்தன்று என்ன செய்கிறோம் என்று தெரிந்தே செய்துள்ளார் என இந்த விவகாரத்தில் ரயில்வே போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், சேத்தன் சின்ஹ் சவுத்ரி கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது மனைவி பிரியங்கா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது கணவர் மீதான குற்றச்சாட்டை வகுப்புவாத கோணத்துடன் இணைக்கப்படக் கூடாது என கூறினார்.

மிக்ஜாம் புயல்: பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை வருகை!

முன்னதாக, சேத்தன் சின்ஹ் சவுத்ரியின் ஜாமீன் மனுவை எதிர்த்த போலீசார், குறிப்பிட்ட சமூகத்தின் மீது அவர் கோபத்தையும் வெறுப்பையும் கொண்டிருந்ததாகவும், குற்றத்திற்காக அவர் எந்த வருத்தமும் காட்டவில்லை எனவும் தெரிவித்திருந்த நிலையில், அவரது மனைவி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

தன் கணவர் மீதான வகுப்புவாத கோணம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தவறானவை எனவும், கடந்த காலங்களில் இந்துக்களுக்கு எதிரான சம்பவங்களால் அவரது மனதில் பயம் இருந்தது எனவும் சேத்தன் சின்ஹ் சவுத்ரியின் மனைவி பிரியங்கா தெரிவித்துள்ளார்

click me!