பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள குடியரசு தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பாமக சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் வேட்பாளர்
இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பா.ஜ.க. தரப்பில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார். ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த பாய்டாபோசி கிராமத்தில் 1958 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி பிறந்தவர் திரவுபதி முர்மு, அவருக்கு ஆதரவு தெரிவிக்குமாறு பாஜக மூத்த தலைவர்கள் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் திரவுபதி முர்மவுக்கு ஆதரவு தெரிவித்து பாமக சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
திரவுபதி முர்மு பாமக ஆதரவு
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை மாண்புமிகு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத்சிங் அவர்களும், பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் திரு. ஜே.பி. நட்டா அவர்களும் நேற்று மாலை தொடர்பு கொண்டு, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுனராகிய திருமதி. திரவுபதி முர்மு அவர்களை களமிறக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்தக் கோரிக்கை குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடன் இன்று காலை கலந்தாய்வு நடத்தினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திருமதி. திரவுபதி முர்மு அவர்கள், ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்மணி ஆவார்.
பழங்குடியின பெண்மணியை ஆதரிப்பதில் பெருமை
மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், பல தடைகளை முறியடித்து பொதுவாழ்வில் முன்னேறியவர். ஜார்க்கண்ட் ஆளுனராக 6 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. திருமதி. திரவுபதி முர்மு அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கும்போது அந்தப் பதவியை அலங்கரிக்கும் முதலாவது பழங்குடியினராகவும், இரண்டாவது பெண்மணியாகவும் இருப்பார். பழங்குடியினர் ஒருவரை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுப்பது அந்த இனத்திற்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பதாலும், செய்யப்படும் பெருமை என்பதாலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் திருமதி திரவுபதி முர்முவை ஆதரிப்பது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாமக சார்பாக வெளியிடப்பட்டுள்ளஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
திரவுபதி முர்மு தலைசிறந்த ஜனாதிபதியாக இருப்பார்.. அடித்துக் கூறும் பிரதமர் மோடி..!