மக்கள் சேவையில் நம்ம பெங்களூரு ஃபௌண்டேஷன்..! 15 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கினார் ராஜீவ் சந்திரசேகர்

By karthikeyan VFirst Published Apr 26, 2021, 9:19 PM IST
Highlights

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உயிர்காக்க உதவும் நோக்கில், 15 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளார் நம்ம பெங்களூரு ஃபௌண்டேஷன் நிறுவனரும், ராஜ்ய சபா பாஜக எம்பியுமான ராஜீவ் சந்திர்சேகர்.
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கொரோனாவால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும், ஆக்ஸிஜன் தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது.

இந்தியா முழுவதுமே ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவும் நிலையில், ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய இந்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்தியாவில் அதிகளவில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யவும் அவற்றை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. கர்நாடகாவிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கர்நாடக தலைநகர் பெங்களுரூவில் தினமும் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியாகிவருவதால், பெங்களூருவில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நம்ம பெங்களூரு ஃபௌண்டேஷன் நிறுவனரும், ராஜ்ய சபா பாஜக உறுப்பினருமான ராஜீவ் சந்திரசேகர், 15 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளார். கொரோனாவிற்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் உயிர்காக்க உதவும் வகையில், 15 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை, எம்பி தேஜஸ்வி சூர்யாவிடம் வழங்கியுள்ளார் ராஜீவ் சந்திரசேகர்.

நம்ம பெங்களூரு ஃபௌண்டேஷனுடன் இணைந்து ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளை கண்டறிந்து உதவி செய்துவருகிறார் தேஜஸ்வி சூர்யா. அதனால் தான் அவரிடம் 15 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளார் ராஜீவ் சந்திரசேகர்.

கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் காலத்தில் கூட நம்ம பெங்களூரு ஃபௌண்டேஷன் சார்பில் பெங்களூருவில் 4.5 லட்சம் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டன. பெங்களூருவில் நம்ம பெங்களூரு ஃபௌண்டேஷன் சேவைகளை தொடர்ச்சியாக செய்துவருகிறது.

பிபிஎம்பியுடன் இணைந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரோட்டரி, அபார்ட்மெண்ட்டுகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்களையும் நடத்தியது நம்ம பெங்களூரு ஃபௌண்டேஷன். கார்ப்பரேட்டுகள் தங்களால் முடிந்த உதவிகளை முன்வருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 

click me!