ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற பிரமாண்டமான பேரணி , சூரத்தை மட்டுமல்ல இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
குஜராத்தின் ஜவுளித் தொழில் மையமான சூரத்தில் 165 ஜவுளிச் சந்தைகள் உள்ளன. இங்கு ஏறத்தாழ 10 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் மோடி அறிவித்த பண மதிப்புழப்பு நடவடிக்கையால் இங்குள்ள தொழிலாளர்களும், ஜவுளித் தொழில் உரிமையாளர்களும், கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மேலும் ஜவுளி உற்பத்தியோ முற்றிலும் வீழ்ந்து போனது. இதுவொருபுறமிருக்க, சூரத்தின் செயற்கை வைரம் பட்டைத் தீட்டும் தொழிலும் முற்றிலும் முடங்கிப் போய்விட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 8 மாதங்களில் இங்குள்ள அனைவரும் மிகக் கடுமையாக உழைத்து, கொஞ்சம், கொஞ்சமாக முன்னேறி வந்தனர். இந்நிலையில் தான் சூரத் நகரை முற்றிலும் முடக்கும் வகையில் மோடி அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அமல்படுத்தியுள்ளது.
கடந்த 30 ஆம் தேதி நள்ளிரவு ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் அமல் படுத்தப்பட்டது.
ஏற்கனவே, ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சூரத் நகரத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
ஆனால் தங்களது கோரிக்கைகளுக்கு இது வரை மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வெகுண்டெழுந்த ஜவுளித் தொழில் உரிமையாளர்கள் சூரத் நகரில் மிகப்பிரமாண்டனமான பேரணி ஒன்றை நடத்தினர்.
5 லட்சத்துக்கும் மேலான வியாபாரிகள் இந்த பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் மத்திய அரசுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து ஜிஎஸ்டி வரி முறையை ரத்து செய்யாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.