கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோயாளிகளின் சடலங்களை புதைக்க குழி தோண்டுபவர்கள் கிடைக்காமலும், எரிக்க கூட இடமில்லாமலும் திண்டாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனிடையே கடந்த வாரத்தில் பீகாரில் உள்ள பக்ஸர் மாவட்டத்தின் வழியாகச் செல்லும் கங்கை ஆற்றில் 70-க்கும் மேற்பட்ட மனித உடல்கள் மிகவும் மோசமான நிலையில் மிதந்தன. இது மட்டுமல்லாமல் உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டம், உஜியார், குல்ஹாதியா, பாராவுளி பகுதியிலும் 50க்கும் மேற்பட்ட உடல்கள் மிதந்தன. இவை அனைத்தும் கொரோனா நோயாளிகளின் சடலங்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இதையடுத்து பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய ஜல் சக்தி அமைச்சகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்ய காத்திருக்க வைப்பதை தவிர்க்க கூடுதல் தகன மேடைகளை உருவாக்கலாம்.
2. இடுகாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா நோயாளிகளின் உடல்களை கையாள விழிப்புணர்வு அளிக்க வேண்டும்.
3. சடலங்களை தொடாமல் இறுதிச்சடங்களை நடத்த அனுமதிக்கலாம் என்றும், மத நூல்களை வாசிக்கவும், புனித நீரை சடலம் மீதும் தெளிக்கவும் அனுமதிக்கலாம்.
4. இறந்தவர்களின் உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்ய இயலாத போது, மத அம்சங்களை கருத்தில் கொண்டு உள்ளாட்சி அமைப்புகள் அவற்றை மேற்கொள்ளலாம்.
5.மின் மயானங்களை அதிகரிக்க வேண்டும்.
6. இறந்தவர்களின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் மொத்தமாக உடல்களை எரிக்க கூடாது.
6.இடுகாடு, மின்மயானத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்
8. இறந்தவர்களின் அடையாளம் மற்றும் தகவல்களை சேகரிக்க வேண்டும்.
9.சடலங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்.
10. இடுகாடு, மின் மயானங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்
11. ஊடகங்களில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை நேரடியாக காட்டக்கூடாது என 11 நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.