
நடிகை நயன்தாரா, கலெக்டராக நடித்து வெளியான படம் அறம். இந்த படம் அனைவராலும் விரும்பப்பட்டது. ஆனால், ஒரு துணை ஆட்சியரே, நடிகையாகி உள்ளார். இங்கு அல்ல கேரளத்தில். திருவனந்தபுரம், துணை ஆட்சியரான திவ்யா ஐயர் தான் அவர். பென்னி ஆசம்சா இயக்கியுள்ள எலிஅம்மச்சிடே ஆத்யதே கிறிஸ்துமஸ் என்ற படத்தின் மூலம் இவர் நடிகையாக மாறியுள்ளார்.
திவ்யா ஐயர், ஐ.ஏ.எஸ். மட்டுமல்ல அவர் ஒரு டாக்டரும் கூட, வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில்தான் அவர் மருத்துவம் படித்துள்ளார். துணை ஆட்சியராக இருந்து கொண்டு தற்போது சினிமாவில் அவர் நடிக்கவும் செய்கிறார். இது குறித்து அவர் பேசும்போது, நான் கோட்டயத்தில் பணியாற்றியபோது இயக்குனர் என்னை அணுகி நடிக்கும்படி கேட்டார். முதியோர் இல்லம் பற்றிய படமாதலால், கதை என்னை ஈர்த்தது என்றார். சமூகத்தில் முதியோர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள். எப்படி பிள்ளைகள் அவர்களைக் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதைப் பற்றிய படம் என்று கூறினார்.
சமூகத்திற்கு கருத்து தெரிவிக்கும் படம். கமர்ஷியல் படம் அல்ல என்பதால்தான் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றார். நான் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதால் முறையாக அரசிடம் அனுமதி வாங்கிய பிறகே படத்தில் நடித்ததாகவும் கூறினார். இந்த படத்துக்கு நான் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தமிழ்படம், மலையாள படம் என்பதை பார்க்க மாட்டேன் என்றும், சமூக கருத்துக்களை தெரிவிக்கும் படமாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் திவ்யா கூறினார்.