உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கோயில் ஒன்றில் மூலவருக்கு ஏசி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. கான்பூரில் 40 டிகிரி செல்சியசுக்குமேலாக வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாது தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், விநாயகர் கோயில் ஒன்றுக்கு ஏசி மற்றும் ஏர்கூலர் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் தானமாக அளித்துள்ளனர். இது குறித்து அந்த கோயிலின் நிர்வாகிகள் பேசும்போது, இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று கூறினர். சாமியும் நம்மைப்போல் வெயிலில் தவித்து வருவதாக கூறிய பக்தர்கள் ஏசி மற்றும் ஏர்கூலரை அளித்தார்கள், அதை பொருத்தியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
கோயில் சிலைக்கு ஏசி அமைக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் உள்ள ஒரு இடத்தில் மட்டுமல்லாமல், 3 இடங்களில் ஏசி வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
மூலவர் சிலைக்கு அருகிலும், இன்னொரு கடவுள் அறையிலும், நந்தி அருகிலும் ஏசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். கடவுளுக்காக மட்டுமே இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
கோடை காலம் என்பதால் வெயில் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த வெயிலில் இருந்து சிலைகளைப் பாதுகாக்கும் பொருட்டு ஏசி பொருத்தி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம், உத்தரபிரதேச மாநிலம் முழுக்க தொடர வாய்ப்பு இருப்பதாகவும், அதன்படி லக்னோவில் உள்ள ராமர் கோயிலுக்கு ஏசி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான செலவை அரசே ஏற்றுக் கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.