
டெல்லியில் செப்டம்பர் மாதம் 18வது ஜி20 உச்சிமாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். செப்டம்பர் 9-10 தேதிகளில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டின் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தின் (IECC) புதிதாக கட்டப்பட்ட பாரத மண்டபம் என்ற இந்தியாவின் மிகப்பெரிய அரங்கை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்து வைத்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 மாநாட்டை இந்தியா நடத்துவது இதுவே முதல் முறை. பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, சிங்கப்பூர் போன்ற 10 நாடுகளின் தலைவர்களையும் இந்தியா அழைப்பாளராக அழைத்துள்ளது. டெல்லியில் உள்ள பழைய பிரகதி மைதானத்தில் 123 ஏக்கர் பரப்பளவில் 2,700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, இந்த பாரத மண்டபத்தில் ஜி 20 உச்சிமாநாடு நடைபெறும்.
இந்த நிலையில், அடுத்த மாதம் ஜி 20 மாநாடு நடைபெற உள்ள பாரத மண்டபத்தில் 30 அடி உயரமுள்ள பிரம்மாண்ட நடராஜர் சிலை வைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து தான் இந்த சிலை கொண்டு செல்லப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு. இந்த பிரம்மாண்ட நடராஜர் சிலை அஷ்டதாதுக்களால் செய்யப்பட்டதாகவும், இது ஒருபோதும் சேதமடையாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரத மண்டபம் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தினுள் அமைந்துள்ள நகரும் சுவர்களை பயன்படுத்தி, 3 தனித்தனி அரங்குகளாகவும் மாற்றி அமைக்கலாம். ஆஸ்திரேலியாவில் சிட்னியில் உள்ள 5500 பேர் அமரக்கூடிய புகழ்பெற்ற சிட்னி ஓபரா ஹவுஸை விட இந்த பாரத மண்டபம் பெரியது. இதில் ஒரே நேரத்தில் 7000 பேர் அமரலாம். இங்கு சுமார் 5500 வாகனங்களை நிறுத்தும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டை நடத்த இந்தியா தலைமை தாங்கி உள்ள நிலையில், நாட்டின் பெருமையை உலக நாடுகள் உணர இந்த பாரத மண்டபமே போதும் என்ற வகையில் பாரத மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.