குடிநீர் தேவைக்குத் தான் முன்னுரிமை: கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் திட்டவட்டம்

By SG BalanFirst Published Sep 9, 2023, 6:52 PM IST
Highlights

காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் முதலில் மேகதாது மற்றும் மகதாயி திட்டங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்று டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தண்ணீரை கர்நாடகாவால் திறந்துவிட முடியவில்லை என்று கூறிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், கர்நாடக அரசு மாநிலத்தின் குடிநீர் தேவைக்குத்தான் முன்னுரிமை அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

மாநிலத்தில் விவசாயிகளின் போராட்டம் குறித்து அவர் கூறுகையில், பெங்களூரு மற்றும் ராமநகர் பகுதியில் ஓரளவு மழை பெய்ததால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று தெரிவித்தார்.

தமிழகத்திற்கு கர்நாடகா தொடர்ந்து தண்ணீர் திறந்து விடுகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, எதிர்பார்த்த அளவு தண்ணீர் வரவில்லை எனவும் அதனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இன்னும் கர்நாடக மாநிலம் மழையை எதிர்பார்த்தே இருக்கிறது என்ற துணை முதல்வர் சிவகுமார் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பது முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.

ஜி20 மாநாட்டில் சென்னைக்கு இவ்வளவு முக்கியத்துவமா! கடல்வழி பொருளாதாரத்தில் புதிய திருப்புமுனை!

"நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தக் கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெங்களூரு, ராமநகர் பகுதியில் ஓரளவு மழை பெய்ததால் நிலைமை கட்டுக்குள் வந்திருக்கிறது" என்று டி.கே.சிவகுமார் கூறினார். பயிர்களைக் காப்பாற்றுவது மற்றும் குடிநீர் ஆகியவையே தங்களின் முன்னுரிமை என்றும் துணை முதல்வர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தில் பாஜகவினரின் கருத்துக்கு பதில் கூறிய அவர், “காங்கிரஸ் அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் முதலில் மேகதாது மற்றும் மகதாயி திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து தேவையான அனுமதியைப் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

மாநிலம் முழுவதும் பெண்கள் சுதந்திரமாகப் பயணம் செய்வதையோ, மக்கள் எளிதாக மின் கட்டணம் செலுத்துவதையோ அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் டி.கே.சிவகுமார் எதிர்க்கட்சிகளைக் குற்றம்சாட்டினார். ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 4 உத்திரவாத திட்டங்களை நிறைவேற்றிய வேறு அரசு இந்தியாவில் இல்லை என்றும் கூறினார்.

முன்னதாக, கடந்த மாதம் விவசாயிகளின் போராட்டத்தை மீறி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு 10 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா அரசு திறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான்-3 விக்ரம் லேண்டரை படம் பிடித்த சந்திரயான்-2 ஆர்பிட்டர்! இஸ்ரோ வெளியிட்ட புதிய புகைப்படம்!

click me!