கழுத்தை அறுக்கும் மாஞ்சா நூலுக்கு தடை….பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி,,,
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காற்றாடிகளை பறக்கவிடுவதற்கு எப்போதுமே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பட்டம் என்றும் அழைக்கப்படும் இந்த காற்றாடிகளைபறக்கவிட்டு விளையாடுவது ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும் இதைப் பறக்கவிடும் மாஞ்சா நூல் மிகுந்த ஆபத்து நிறைந்தது.
நைலான் அல்லது செயற்கை பருத்தியால் தயாரிக்கப்படும் இந்த நூலில் கண்ணாடியை இடித்து தூளாக்கி அதை பசையுடன் கலந்து நூலில் பூசி காற்றாடிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மிகுந்த ஆபத்து நிறைந்த இந்த மாஞ்சா நூலில் தயாரித்த காற்றாடிகளை பறக்கவிடும்போது அதன் நூல் கழுத்தில் சிக்கி இதுவரை ஏராளமானோர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த காற்றாடி நூல் பறவைகளின் உயிரையும் பறிக்கின்றன. எனவே மாஞ்சா நூலுக்கு தடை விதிக்கவேண்டும்” என்று கோரி விலங்குகள் நல அமைப்பான “பீட்டா” தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் மனுத்தாக்கல் செய்தது.
இந்த மனு பசுமை தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான திரு சுவதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணை க்கு வந்தது..
அப்போது மாஞ்சா நூல் கொள்முதல் செய்வது, இருப்பு வைப்பது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்..