ஆந்திராவில் பொதுமக்கள் நலன் கருதி தற்போது இருக்கும் 13 மாவட்டங்களை இரண்டாக பிரித்து, புதிதாக 13 மாவட்டங்கள் என மொத்தம் 26 மாவட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன. மேலும் தெலுங்கு வருட பிறப்பு அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியற்றுக்கொண்டதில் இருந்து அதிரடியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறார். அதன்படி காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை விடுமுறை திட்டம், ஒரு மாவட்டத்துக்கு ஒரு விமான நிலையம் திட்டம் உள்ளிட்ட புதுமையான பலவேறு திட்டங்களை அவர் அறிவித்து வருகிறார். ஆனாலும் மூன்று தலைநகரங்கள் திட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அத்திட்டத்தை அவர் சமீபத்தில் கைவிடுவதாக அறிவித்தார்.
இந்நிலையில்ஆந்திராவில் தற்போது சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபுரம் விசாகப்பட்டினம் உட்பட 13 மாவட்டங்கள் உள்ளன.இந்த 13 மாவட்டங்களும் அதிக பரப்பளவு கொண்டவையாக இருப்பதால் மாவட்ட தலைநகரங்கள் அதிக தூரத்தில் இருப்பதால் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் நலன் கருதியும், நிர்வாக வசதிக்காகவும் மாவட்டங்களை 2-ஆக பிரிக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் 13 மாவட்டங்களை பிரிக்கும் பணியில் வருவாய்த்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பணிகள் முடிவடைந்ததால் மாவட்டங்கள் பிரிப்பதற்கான வரைபடங்களை நேற்றுமுன்தினம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் அதிகாரிகள் வழங்கினர். அதன்படி புதிதாக 13 மாவட்டங்கள் உயதமாகிறது. மொத்தம் 26 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.சித்தூர் மாவட்டம் சித்தூர், திருப்பதி என 2-ஆக பிரிக்கப்பட்டு சித்தூர் மாவட்டத்திற்கு சித்தூர் தலைநகரமாகவும், திருப்பதியை தலைமையிடமாக கொண்டு பாலாஜி மாவட்டம் புதிதாக உதயமாகிறது.
இதேபோல் அனந்தபுரம் மாவட்டம் அனந்தபுரம், சத்திய சாயி எனவும், கடப்பா மாவட்டம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா, அன்னமய்யா மாவட்டம் எனவும், நெல்லூர் மாவட்டம் நெல்லூர், பொட்டி ஸ்ரீராமுலு மாவட்டமாக பிரிக்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெலுங்கு வருட பிறப்பு அன்று அறிவிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.